Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

நான் பொறுப்பாக நடந்துகொள்கிறேனா?

நான் பொறுப்பாக நடந்துகொள்கிறேனா?

 உங்களைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?

  •  நான் எப்போதுமே/ நிறைய நேரங்களில்/ சில நேரங்களில்/ இல்லவே இல்லை . . .

    •  நேர்மையானவன் a

    •  நேரம் தவறாதவன்

    •  சுறுசுறுப்பானவன்

    •  உதவத் தயாராக இருப்பவன்

    •  நியாயமானவன்

    •  மரியாதை கொடுப்பவன்

    •  அக்கறை காட்டுபவன்

  •   இதில் எந்தக் குணத்தில் நீங்கள் பெஸ்ட் என்று சொல்வீர்கள்? சபாஷ்! அதைத் தொடர்ந்து செய்யுங்கள்.—பிலிப்பியர் 3:16.

  •   இதில் எந்தக் குணத்தில் நீங்கள் முன்னேற நினைக்கிறீர்கள்?

 கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விஷயங்கள் அதில் முன்னேற உங்களுக்கு உதவும்.

 ஒருவர் பொறுப்பாக நடந்துகொள்கிறார் என்று எதை வைத்து சொல்லலாம்?

 பொறுப்பான ஒருவர் வீட்டில்... ஸ்கூலில்... சமுதாயத்தில்... தனக்கு இருக்கிற கடமைகளைச் சரியாக செய்வார். அவருடைய செயல்களுக்கு அவர்தான் பொறுப்பு என்பதைப் புரிந்து நடந்துகொள்வார். அதனால், அவர் ஏதாவது தவறு செய்தாலும் அதை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பார், அதைச் சரி செய்யவும் முயற்சி செய்வார்.

 பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஒவ்வொருவனும் அவனவன் பாரத்தை சுமப்பான்.”—கலாத்தியர் 6:5.

 நான் ஏன் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்?

பொறுப்பான ஒருவர் தன்னுடைய திறமைகளை சரியாக பயன்படுத்துவார். அதனால் ஒரு சின்ன பிள்ளையை நடத்துகிற மாதிரி அவருடைய பெற்றோர் அவரை நடத்த மாட்டார்கள். அவருக்கு சில சுதந்திரம் கொடுக்கவும் அவரை மரியாதையாக நடத்தவும் வாய்ப்பிருக்கிறது. அவருடைய சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றவும் வாய்ப்பிருக்கிறது.

 பைபிள் இப்படிச் சொல்கிறது: “திறமையாக வேலை செய்கிறவனைப் பார்த்திருக்கிறாயா? அவன் சாதாரண ஆட்கள் முன்னால் அல்ல, ராஜாக்கள் முன்னால் நிற்பான்.”—நீதிமொழிகள் 22:29.

பொறுப்பான ஒரு நபர் மற்றவர்களுக்கு தாராளமாக கொடுப்பார். அதனால் அவருக்கு நிறைய நல்ல நண்பர்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

 பைபிள் இப்படிச் சொல்கிறது: “கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள்.”—லூக்கா 6:38.

பொறுப்பான ஒருவர் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்வார். அதனால் அவருக்கு மன திருப்தியும் சந்தோஷமும் கிடைக்கும். அவருடைய தன்னம்பிக்கை அதிகமாகும்.

 பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஒவ்வொருவனும் தன்னுடைய செயல்களை ஆராய்ந்து பார்க்கட்டும். அப்போது, அவன் . . .தன்னைப் பார்த்தே சந்தோஷப்படுவான்.”—கலாத்தியர் 6:4.

 நான் இன்னும் எப்படிப் பொறுப்பாக நடந்துகொள்ளலாம்?

 இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்பு கீழே கொடுக்கப்பட்டிருப்பதைப் பாருங்கள். இதில் எதைப் படித்தவுடனே ‘இப்படித்தான் நானும் ஃபீல் பண்றேன்’ என்று சொல்வீர்கள்?

 “ஒரு சின்ன பிள்ளையிடம் கேட்கிற மாதிரி, ‘நீ எங்கே இருக்கிறாய், என்ன பண்ணுகிறாய்’ என்று என் அப்பா-அம்மா அடிக்கடி என்னைக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அப்படிக் கேட்டாலே எனக்கு ரொம்ப கடுப்பாக இருக்கும்!”—கெரி.

 “நான் ஃப்ரெண்ட்ஸோடு வெளியே போவதில் என் அப்பா-அம்மாவுக்கு எந்தப் பிரச்சினையுமே இல்லை.”—ரிச்சர்ட்.

 “என் வயசு பிள்ளைகள் பண்ணுவதையெல்லாம் பார்க்கும்போது ‘என் அப்பா-அம்மா மட்டும் ஏன் என்னை இதையெல்லாம் செய்ய விடுவதில்லை?’ என்று நான் யோசிப்பேன்.”—ஆன்.

 “நான் ஆசைப்பட்டதை எல்லாம் செய்ய என் அப்பா-அம்மா எனக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். இதற்காக நான் அவர்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் சொல்வேன்.”—மரினா.

 சுருக்கமாக சொன்னால்: சில இளைஞர்களுக்கு மற்றவர்களைவிட அதிக சுதந்திரம் கிடைக்கிறது. இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

 வாழ்க்கையின் எதார்த்தம்: அப்பா-அம்மாவிடம் நீங்கள் நம்பிக்கையை சம்பாதிப்பதைப் பொறுத்துதான் உங்களுக்கு எந்தளவுக்கு சுதந்திரம் கொடுக்கலாம் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள்.

 உதாரணத்துக்கு, நாம் முன்பு பார்த்த இரண்டு இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்.

 ரிச்சர்ட்: “‘சுதந்திரம் கொடுத்தால் இவன் எப்படி நடந்துகொள்வானோ?’ என்று என் அப்பா-அம்மா ஒருசமயம் பயந்தார்கள். ஆனால் இப்போது என்னை அவர்கள் முழுசாக நம்புகிறார்கள். ஏனென்றால், எனக்கு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக நான் என் இஷ்டத்துக்கு நடந்துகொள்ள மாட்டேன். நான் எங்கே போகிறேன், யார் கூட போகிறேன் என்பதைப் பற்றியெல்லாம் என் அப்பா-அம்மாவிடம் பொய் சொல்ல மாட்டேன். அதைப் பற்றி அவர்கள் கேட்பதற்கு முன்பு நானே சொல்லிவிடுவேன்.”

 மரினா: “என் அப்பா-அம்மாவிடம் இதுவரைக்கும் நான் இரண்டு தடவை மட்டும்தான் பொய் சொல்லியிருக்கிறேன். இரண்டு தடவையும் மாட்டிக்கொண்டேன். அப்போதிருந்து இதுவரைக்கும் என் அம்மா- அப்பாவிடம் நான் பொய் சொல்வதே கிடையாது. என்னைப் பற்றி எந்த விஷயத்தையுமே நான் அவர்களிடம் மறைக்க மாட்டேன். நான் வெளியே போனால் கூட அடிக்கடி அவர்களுக்கு போன் பண்ணி பேசிவிடுவேன். அதனால் இப்போது அவர்கள் என்னை நிறையவே நம்புகிறார்கள்.“

வீட்டு வேலையா, விளையாட்டா?—இதில் எதை முதலில் செய்வீர்கள்?

 ரிச்சர்டையும் மரினாவையும் நடத்துகிற மாதிரி உங்களையும் உங்கள் அப்பா-அம்மா நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், கீழே சொல்லியிருக்கிற விஷயங்களில் நீங்கள் எப்படி என்று யோசித்துப் பாருங்கள்.

வீட்டில் நீங்கள் எப்படி?

  •   உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை எல்லாம் ஒழுங்காக செய்து முடிக்கிறீர்களா?

  •   சொன்ன நேரத்துக்கு கரெக்டாக வீட்டுக்கு வந்து விடுகிறீர்களா?

  •   உங்கள் அப்பா-அம்மாவையும் உங்கள் கூட பிறந்தவர்களையும் மரியாதையாக நடத்துகிறீர்களா?

 இதில் ஏதாவது விஷயத்தில் நீங்கள் இன்னும் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

 பைபிள் இப்படிச் சொல்கிறது: “உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கீழ்ப்படிந்து நடங்கள்.”—எபேசியர் 6:1.

படிப்பில் நீங்கள் எப்படி?

  •   உங்களுடைய ஹோம்வொர்க்கை எல்லாம் நேரத்துக்கு செய்துமுடித்து விடுகிறீர்களா?

  •   நல்ல மார்க் எடுக்க நீங்கள் கடுமையாக முயற்சி செய்கிறீர்களா?

  •   நன்றாகப் படிக்கிற பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா?

 இதில் ஏதாவது விஷயத்தில் நீங்கள் இன்னும் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

 பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஞானமும் பாதுகாப்பு தரும்.” (பிரசங்கி 7:12) உங்களுக்குக் கிடைக்கும் கல்வி ஞானமாக நடந்துகொள்ள உங்களுக்கு உதவும்.

நீங்கள் எப்படிப்பட்ட பெயர் எடுத்திருக்கிறீர்கள்?

  •   உங்கள் அப்பா அம்மாவிடமும் மற்றவர்களிடமும் நேர்மையாக நடக்கிறீர்களா?

  •   பண விஷயத்தில் பொறுப்பாக இருக்கிறீர்களா?

  •   நம்பிக்கையானவர் என்ற பெயர் வாங்கியிருக்கிறீர்களா?

 இதில் ஏதாவது விஷயத்தில் நீங்கள் இன்னும் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

 பைபிள் இப்படிச் சொல்கிறது: “புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்.” (எபேசியர் 4:24) உங்களால் நல்ல குணங்களை வளர்க்க முடியும், நல்ல பெயரை சம்பாதிக்க முடியும்.

 டிப்ஸ்: நீங்கள் முன்னேற்றம் செய்ய வேண்டியிருக்கிற ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அதை பெஸ்டாக செய்கிறவர்களிடம் பேசுங்கள். அதில் நீங்கள் இன்னும் எப்படி முன்னேறலாம் என்று கேளுங்கள். அதற்காக நீங்கள் என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள் என்று எழுதுங்கள். ஒரு மாதத்தில் நீங்கள் எவ்வளவு முன்னேற்றம் செய்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். எதில் நீங்கள் சூப்பராக செய்திருக்கிறீர்கள், எதில் சொதப்பியிருக்கிறீர்கள் என்பதையும் எழுதி வையுங்கள். மாதக் கடைசியில் நீங்கள் செய்திருக்கிற முன்னேற்றத்தை பாருங்கள்.

a இந்தக் கட்டுரையில் உள்ள விஷயங்கள் பெண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.