Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

வாய்வழி செக்ஸ் என்பதும் செக்ஸ்தானா?

வாய்வழி செக்ஸ் என்பதும் செக்ஸ்தானா?

 அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட நிறைய இளைஞர்களைப் பேட்டி எடுத்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த இளைஞர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் வாய்வழி செக்ஸில் ஈடுபட்டிருந்ததாக அந்த அறிக்கை சொன்னது. “[வாய்வழி செக்ஸ் பற்றி] டீனேஜர்களிடம் கேட்டால், ‘இதுல என்ன இருக்கு?’ என்றுதான் அசால்டாக சொல்கிறார்கள். பார்க்கப்போனால், வாய்வழி செக்ஸ் என்பது செக்ஸே இல்லை என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள்” என்று ஓரல் செக்ஸ் இஸ் த நியூ குட்நைட் கிஸ் என்ற புத்தகத்தை எழுதிய ஷார்லீன் ஏசம் சொல்கிறார்.

 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.

  1.   வாய்வழி செக்ஸ் மூலம் ஒரு பெண் கர்ப்பமாக முடியுமா?

    1.   முடியும்

    2.   முடியாது

  2.   வாய்வழி செக்ஸ் வைத்துக்கொள்வதால் ஏதாவது நோய் வருமா?

    1.   வரும்

    2.   வராது

  3.   வாய்வழி செக்ஸ் என்பதும் செக்ஸ்தானா?

    1.   ஆமாம்

    2.   இல்லை

 உண்மை என்ன?

 உங்கள் பதில்களையும் கீழே இருக்கும் பதில்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

  1.   வாய்வழி செக்ஸ் மூலம் ஒரு பெண் கர்ப்பமாக முடியுமா?

     பதில்: முடியாது. வாய்வழி செக்ஸில் எந்த ஆபத்தும் இல்லை என்று நிறைய பேர் தப்புக்கணக்குப் போடுவதற்கு ஒரு காரணம் இதுதான்.

  2.   வாய்வழி செக்ஸ் வைத்துக்கொள்வதால் ஏதாவது நோய் வருமா?

     பதில்: வரும். வாய்வழி செக்ஸ் வைத்துக்கொண்டால் கல்லீரல் அழற்சி (hepatitis A அல்லது B), பிறப்புறுப்பு மருக்கள் (genital warts), வெட்டை நோய் (gonorrhea), படர்தாமரை (herpes), எச்ஐவி, கிரந்தி (syphilis) போன்ற தொற்றுநோய்கள் வரலாம்.

  3.   வாய்வழி செக்ஸ் என்பதும் செக்ஸ்தானா?

     பதில்: ஆமாம். பாலியல் இன்பத்துக்காக இன்னொருவரின் பிறப்புறுப்பை எந்த விதத்தில் தொட்டாலும் அது செக்ஸ்தான். அதாவது சாதாரண உடலுறவு மட்டுமல்லாமல், வாய்வழி செக்ஸ், ஆசனவாய் செக்ஸ், இன்னொருவரின் பிறப்புறுப்பைக் கிளர்ச்சியடையச் செய்வது போன்ற எல்லாமே செக்ஸ்தான்.

 கடவுள் என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்?

 வாய்வழி செக்ஸ் பற்றிக் கடவுள் என்ன நினைக்கிறார் என்று புரிந்துகொள்ள உதவும் சில பைபிள் வசனங்களைப் பாருங்கள்.

 பைபிள் வசனம்: ‘நீங்கள் . . . பாலியல் முறைகேட்டுக்கு விலகியிருக்க வேண்டும் என்பது கடவுளுடைய விருப்பம்.’—1 தெசலோனிக்கேயர் 4:3.

 பைபிளில் ‘பாலியல் முறைகேடு’ என்பது, பாலியல் இன்பத்துக்காகச் செய்யப்படும் எல்லா விதமான முறையற்ற செயல்களையும் குறிக்கிறது. அதாவது, மணத்துணையாக இல்லாதவரோடு வைத்துக்கொள்ளும் உடலுறவு, அதோடு வாய்வழி செக்ஸ், ஆசனவாய் செக்ஸ், இன்னொருவரின் பிறப்புறுப்பைக் கிளர்ச்சியடையச் செய்வது போன்ற எல்லாவற்றையுமே இது குறிக்கிறது. பாலியல் முறைகேட்டில் ஈடுபடும் ஒருவர் விபரீதமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கலாம். சொல்லப்போனால், கடவுளோடு இருக்கும் பந்தத்தையே இழந்துவிடலாம். இதைவிடக் கொடுமை வேறு எதுவும் இல்லை!—1 பேதுரு 3:12.

 பைபிள் வசனம்: “பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவன் தன் உடலுக்கு எதிராகவே பாவம் செய்கிறான்.”—1 கொரிந்தியர் 6:18.

 வாய்வழி செக்ஸ் வைத்துக்கொண்டால் நோய்கள் வரலாம், கடவுளோடு இருக்கும் பந்தம் முறிந்துவிடலாம், அதோடு பலவிதமான உணர்ச்சிகள் நம்மைப் பாடாய்ப் படுத்தலாம். “திருமணத்துக்கு முன்பு யாருடனாவது உடலுறவு வைத்துக்கொள்கிறவர்கள் சிலசமயம் அதை நினைத்து வருத்தப்படுகிறார்கள். ஒருவருடைய இச்சைக்கு இரையாகிவிட்டோமோ, வெறும் காமப்பொருளாகிவிட்டோமோ என்றெல்லாம் நினைத்துப் புழுங்குகிறார்கள். எந்த விதமான செக்ஸ் வைத்துக்கொண்டாலும் இதே கதிதான் ஏற்படுகிறது” என்று சொல்கிறது டாக்கிங் செக்ஸ் வித் யுவர் கிட்ஸ் என்ற புத்தகம்.

 பைபிள் இப்படிச் சொல்கிறது: “யெகோவாவாகிய நானே உங்கள் கடவுள். உங்களுக்குப் பிரயோஜனமானதை நான் கற்றுக்கொடுக்கிறேன்.”—ஏசாயா 48:17.

 உங்களுடைய நல்லதுக்குத்தான் செக்ஸ் சம்பந்தப்பட்ட சட்டங்களைக் கடவுள் கொடுத்திருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அல்லது, அந்தச் சட்டங்கள் உங்கள் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதுபோல் தெரிகிறதா? நிறைய வண்டிகள் போய்க்கொண்டிருக்கும் ஒரு பெரிய நெடுஞ்சாலையை யோசித்துப் பாருங்கள். எவ்வளவு வேகத்தில் போக வேண்டும், எங்கே நிற்க வேண்டும் என்றெல்லாம் சொல்லும் வழிகாட்டிப் பலகைகளும் சிக்னல்களும் அங்கங்கே வைக்கப்பட்டிருக்கும். அந்தப் பலகைகளும் சிக்னல்களும் உங்களுக்குத் தொல்லை கொடுப்பதாக நினைப்பீர்களா அல்லது உங்கள் உயிரைப் பாதுகாப்பதாக நினைப்பீர்களா? நீங்களோ மற்றவர்களோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் என்ன நடக்கும்?

சாலை விதிகள் உங்கள் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தலாம், ஆனால் அவை உங்களைப் பாதுகாக்கும். கடவுளுடைய சட்டங்களும் அப்படித்தான்

 கடவுளுடைய சட்டங்களும் அதே மாதிரிதான். அந்தச் சட்டங்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், மோசமான விளைவுகளை நிச்சயம் சந்திப்பீர்கள்! (கலாத்தியர் 6:7) செக்ஸ் ஸ்மார்ட் என்ற புத்தகம் இப்படிச் சொல்கிறது: “உங்களுடைய நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் விட்டுக்கொடுத்துவிட்டு, உங்களுக்குச் சரியாய்ப் படாத விஷயங்களைச் செய்யும்போது சுயமரியாதையை இழக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.” அதற்குப் பதிலாக, கடவுள் சொல்வதைக் கேட்டு நடந்தால், ஒழுக்கமான பெண் அல்லது ஒழுக்கமான பையன் என்ற பெயரெடுப்பீர்கள். அதைவிட முக்கியமாக, சுத்தமான மனசாட்சியோடு நிம்மதியாக வாழ்வீர்கள்.—1 பேதுரு 3:16.