Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 16

உங்கள் குடும்பத்துக்கு நிலையான எதிர்காலத்தை உறுதி செய்துகொள்ளுங்கள்

உங்கள் குடும்பத்துக்கு நிலையான எதிர்காலத்தை உறுதி செய்துகொள்ளுங்கள்

1.குடும்ப ஏற்பாட்டின் பேரில் யெகோவாவின் நோக்கம் என்னவாக இருந்தது?

 யெகோவா ஆதாமையும் ஏவாளையும் திருமணத்தில் இணைத்தபோது, ஆரம்ப காலத்திலேயே பதிவுசெய்யப்பட்டிருந்த எபிரெய கவிதையை வெளிப்படக்கூறுவதன்மூலம் ஆதாம் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான். (ஆதியாகமம் 2:22, 23) என்றபோதிலும், படைப்பாளர் தன் மானிட பிள்ளைகளுக்கு வெறுமனே இன்பமளிப்பதைக் காட்டிலும் அதிகத்தை மனதில் கொண்டிருந்தார். திருமணமான தம்பதிகளும் குடும்பங்களும் அவருடைய சித்தத்தைச் செய்ய வேண்டுமென்று அவர் விரும்பினார். அவர் முதல் ஜோடியிடம் சொன்னார்: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்.” (ஆதியாகமம் 1:28) அது என்னே ஒரு மகத்தான, பலனளிக்கும் நியமிப்பாக இருந்தது! ஆதாமும் ஏவாளும் அவர்களுடைய எதிர்கால பிள்ளைகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து யெகோவாவின் சித்தத்தை முழு கீழ்ப்படிதலோடு செய்திருந்தால் எவ்வளவு சந்தோஷமாய் இருந்திருப்பார்கள்!

2, 3. இன்று குடும்பங்கள் எவ்வாறு மிகுதியான மகிழ்ச்சியைக் கண்டடையலாம்?

2 இன்றும்கூட, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கென்று குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து உழைக்கையில் மகிழ்ச்சிமிக்க நிலையை அடைகின்றன. “தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (1 தீமோத்தேயு 4:8) தேவபக்தியோடு வாழ்ந்து, பைபிளில் அடங்கியிருக்கும் யெகோவாவின் வழிநடத்துதலைப் பின்பற்றும் குடும்பம் ‘இந்த ஜீவனில்’ மகிழ்ச்சி காணும். (சங்கீதம் 1:1-3; 119:105; 2 தீமோத்தேயு 3:16, 17) குடும்பத்தில் ஒரு அங்கத்தினராவது பைபிள் நியமங்களைப் பொருத்தினால், எவருமே பொருத்தாமல் இருப்பதைவிட நிலைமை மேம்பட்டதாய் இருக்கும்.

3 குடும்ப மகிழ்ச்சிக்கு உதவியளிக்கும் அநேக பைபிள் நியமங்களை இப்புத்தகம் கலந்தாலோசித்திருக்கிறது. புத்தகம் முழுவதும் அவற்றில் சில திரும்பத் திரும்ப தோன்றுவதை நீங்கள் ஒருவேளை கவனித்திருப்பீர்கள். ஏன்? ஏனென்றால் அவை வல்லமைவாய்ந்த சத்தியங்களை எடுத்துரைக்கின்றன, குடும்ப வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் எல்லாருடைய நன்மைக்கென்றும் அவை செயல்படுகின்றன. இந்தப் பைபிள் நியமங்களைப் பொருத்த முயற்சிசெய்யும் குடும்பங்கள், தேவபக்தியானது உண்மையிலேயே ‘இந்த ஜீவனுக்கு வாக்குத்தத்தமுள்ளதாய்’ இருப்பதாக காண்கிறார்கள். அந்த முக்கியமான நியமங்களில் நான்கு நியமங்களை நாம் மறுபடியும் காண்போம்.

தன்னடக்கத்தின் மதிப்பு

4. திருமணத்தில் தன்னடக்கம் ஏன் இன்றியமையாதது?

4 சாலொமோன் ராஜா சொன்னார்: “தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம் போலிருக்கிறான்.” (நீதிமொழிகள் 25:28; 29:11) மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை விரும்புவோருக்கு, ‘ஆவியை அடக்கிக்கொள்ளுதல்,’ தன்னடக்கத்தைப் பிரயோகித்தல் மிகவும் முக்கியமானது. கடுஞ்சினம், ஒழுக்கக்கேடான துர் ஆசை போன்ற அழிவுண்டாக்கும் உணர்ச்சிகளுக்கு பணிந்துவிடுவது கெடுதி விளைவிக்கும்—அப்படியே சரிசெய்ய முடிந்தாலும்—அதைச் சரிசெய்வதற்கு பல வருடங்கள் எடுக்கும்.

5. ஒரு அபூரண மானிடன் தன்னடக்கத்தை எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம், என்ன நன்மைகளோடு?

5 ஆதாமின் சந்ததியில் வந்த எவரும் தன் அபூரண மாம்சத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாது. (ரோமர் 7:21, 22) அவ்வாறு இருப்பினும், தன்னடக்கம் ஆவியின் கனியாக இருக்கிறது. (கலாத்தியர் 5:22, 23, NW) எனவே, நாம் இந்தப் பண்புக்காக ஜெபித்தோமென்றால், வேதாகமத்தில் அதைப் பற்றி கொடுக்கப்படும் பொருத்தமான புத்திமதியை நாம் பிரயோகித்தோமென்றால், அதை வெளிப்படுத்திக் காண்பிப்பவர்களோடு கூட்டுறவுகொண்டு, அதைக் காண்பிக்காதவர்களின் கூட்டுறவைத் தவிர்த்தோமென்றால் கடவுளுடைய ஆவி நம்மில் தன்னடக்கத்தை பிறப்பிக்கும். (சங்கீதம் 119:100, 101, 130; நீதிமொழிகள் 13:20; 1 பேதுரு 4:7) நாம் சோதிக்கப்பட்டாலும்கூட, அப்படிப்பட்ட போக்கு ‘வேசித்தனத்திற்கு விலகியோட’ நமக்கு உதவிசெய்யும். (1 கொரிந்தியர் 6:18) நாம் வன்முறையை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, குடிவெறி பழக்கத்தைத் தவிர்ப்போம் அல்லது அதை மேற்கொள்வோம். கடினமான சூழ்நிலைகளையும் கோபத்தைத் தூண்டும் சூழ்நிலைகளையும் நாம் அதிக சாந்தமாக கையாளுவோம். பிள்ளைகள் உட்பட எல்லாரும், இந்த முக்கியமான ஆவியின் கனியை வளர்த்துக்கொள்ள கற்றுக்கொள்வோமாக.—சங்கீதம் 119:1, 2.

தலைமை வகிப்பைக் குறித்து சரியான நோக்குநிலை

6. (அ) கடவுளால் ஏற்படுத்தப்பட்ட தலைமை வகிப்பு ஏற்பாடு என்ன? (ஆ) தன் தலைமை வகிப்பு குடும்பத்துக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டுமென்றால், கணவர் எதை நினைவில் வைக்க வேண்டும்?

6 தலைமை வகிப்பை அங்கீகரிப்பது இரண்டாவது முக்கியமான நியமம். பவுல் சரியான வரிசைக் கிரமத்தை விவரித்தார்: “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும் ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும் நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.” (1 கொரிந்தியர் 11:3) இதன் அர்த்தம் குடும்பத்தை கணவன் தலைமை தாங்கி நடத்துகிறார், அவருடைய மனைவி உண்மைத்தன்மையோடு ஆதரவு தருகிறாள், பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படிதலுள்ளவர்களாய் இருக்கின்றனர் என்பதே. (எபேசியர் 5:22-25, 27, 28-33; 6:1-4) ஆனால், தலைமை வகிப்பு சரியான விதத்தில் கையாளப்பட்டால் மட்டுமே அது மகிழ்ச்சிக்கு வழிநடத்தும் என்பதை கவனியுங்கள். தேவபக்தியோடு வாழும் கணவர்கள் தலைமை வகிப்பு சர்வாதிகாரம் அல்ல என்பதை அறிந்திருக்கின்றனர். அவர்கள் தங்கள் தலைவராகிய இயேசுவை பின்பற்றுகின்றனர். இயேசு “எல்லாவற்றிற்கும் மேலான தலையாக” இருக்கப்போவதால், அவர் ‘ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்ய’ வந்தார். (எபேசியர் 1:23; மத்தேயு 20:28) அதே விதத்தில், ஒரு கிறிஸ்தவ கணவர் தனக்கு மட்டும் நன்மையை வருவித்துக்கொள்ளாமல், தன் மனைவி மற்றும் பிள்ளைகளின் அக்கறைகளைக் கவனித்துக்கொள்வதற்காக தலைமை வகிப்பைப் பயன்படுத்துகிறார்.—1 கொரிந்தியர் 13:4, 5.

7 . குடும்பத்தில் மனைவிக்கென்று கடவுள் நியமித்திருக்கும் பங்கை நிறைவேற்றுவதற்கு என்ன வேதப்பூர்வமான நியமங்கள் அவளுக்கு உதவும்?

7 ஆனால் தேவபக்தியோடு வாழும் மனைவியோ தன் கணவனோடு போட்டி போடுவதில்லை அல்லது அவர்மீது ஆதிக்கம் செலுத்த நாடுவதில்லை. அவள் அவருக்கு ஆதரவாயிருந்து அவரோடு சேர்ந்து வேலைசெய்ய சந்தோஷப்படுகிறாள். பைபிள் சில சமயங்களில் மனைவியை கணவனுக்குச் ‘சொந்தமானவளாக’ இருப்பதாகச் சொல்கிறது, அவர் அவளுக்குத் தலைவன் என்பதைக் குறித்து எந்தவித சந்தேகத்தையும் விட்டுவைப்பதில்லை. (ஆதியாகமம் 20:3, NW) அவள் திருமணத்தின்மூலம் ‘புருஷனைப் பற்றிய பிரமாணத்தின்’ கீழ் வருகிறாள். (ரோமர் 7:2) அதே சமயத்தில் பைபிள் அவளை ‘உதவியாள்’ மற்றும் ‘நிறைவுசெய்பவள்’ என்று அழைக்கிறது. (ஆதியாகமம் 2:20, NW) அவள் தன் கணவனிடம் குறைவுபடும் பண்புகளையும் திறமைகளையும் நிறைவுசெய்து அவருக்குத் தேவையான ஆதரவைத் தருகிறாள். (நீதிமொழிகள் 31:10-31) தன் துணைவரோடு சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு நெருக்கமாக ஒத்துழைக்கும் மனைவியை ஒரு ‘தோழி’ என்றும்கூட பைபிள் சொல்கிறது. (மல்கியா 2:14) கணவனும் மனைவியும் தங்கள் தங்கள் ஸ்தானத்தைப் புரிந்துகொள்ளவும் ஒருவரையொருவர் தகுந்த மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்தவும் இப்படிப்பட்ட வேதாகம நியமங்கள் உதவுகின்றன.

‘கேட்கிறதற்குத் தீவிரமாயிருங்கள்’

8, 9. குடும்பத்திலுள்ள அனைவரும் தங்கள் கருத்து பரிமாற்ற திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவும் சில நியமங்களை விளக்குங்கள்.

8 இப்புத்தகத்தில் கருத்து பரிமாற்றம் செய்வதற்கான தேவை அடிக்கடி சிறப்பித்துக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஏன்? ஏனென்றால், ஒருவரோடொருவர் பேசி ஒருவர் சொல்வதை மற்றவர் உண்மையிலேயே செவிகொடுத்துக் கேட்கும்போது, பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வது சுலபம். கருத்து பரிமாற்றம் என்பது இரு-வழி பாதை என்று திரும்பத்திரும்ப அழுத்தியுரைக்கப்பட்டது. அதை சீஷனாகிய யாக்கோபு இந்த விதத்தில் தெரிவித்தார்: “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும் பேசுகிறதற்குப் பொறுமையாயும்” இருக்கக்கடவர்கள்.—யாக்கோபு 1:19.

9 நாம் எவ்வாறு பேச வேண்டும் என்பதைக் குறித்தும் கவனமுள்ளவர்களாய் இருப்பது முக்கியம். துணிச்சலாக, சண்டையிடுகிற விதத்தில் அல்லது கடுமையாக குறைகூறும் வார்த்தைகளைச் சொல்வது போன்றவை வெற்றிகரமான கருத்து பரிமாற்றமாக இருக்காது. (நீதிமொழிகள் 15:1; 21:9; 29;11, 20) நாம் சொல்வது சரியாக இருந்தாலும்கூட, அது கொடூரமாக, பெருமையாக அல்லது உணர்ச்சியற்ற விதத்தில் சொல்லப்பட்டால், அது நன்மை செய்வதைக் காட்டிலும் அதிக தீமை செய்வதாக இருக்கும். நம் பேச்சு ருசியாக ‘உப்பால் சாரமேறினதாக’ இருக்க வேண்டும். (கொலோசெயர் 4:6) நம் வார்த்தைகள் ‘வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானமாய்’ இருக்க வேண்டும். (நீதிமொழிகள் 25:11) நன்றாக கருத்து பரிமாற்றம் செய்வதற்குக் கற்றுக்கொள்ளும் குடும்பங்கள் மகிழ்ச்சி பெறுவதற்கு பெரும் படியை எடுத்திருக்கின்றன.

அன்பின் இன்றியமையா பங்கு

10. திருமணத்தில் என்ன வகையான அன்பு இன்றியமையாதது?

10 “அன்பு” என்ற சொல் இந்தப் புத்தகம் முழுவதும் திரும்பத்திரும்ப தோன்றுகிறது. முக்கியமாய் குறிப்பிட்டுக் காண்பிக்கப்பட்டிருக்கும் ஒருவகையான அன்பு உங்களுக்கு நினைவிருக்கிறதா? காதல் உணர்ச்சிமிக்க அன்பு (கிரேக்க மொழியில், ஈராஸ் [eʹros]) திருமணத்தில் முக்கியமான பாகத்தை வகிக்கிறது என்பது உண்மைதான், மேலும் வெற்றிகரமான திருமணங்களில் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மிகுதியான பாசமும் நட்பும் (கிரேக்க மொழியில், ஃபீலியா [phi·liʹa]) வளருகிறது. ஆனால் அதைக்காட்டிலும் அகாப்பே (a·gaʹpe) என்ற கிரேக்க வார்த்தை அர்த்தப்படுத்தும் அன்பே அதிமுக்கியமான அன்பு. இந்த அன்பைதான் நாம் யெகோவா, இயேசு, நம் அயலார் ஆகியோரிடமாக வளர்த்துக்கொள்கிறோம். (மத்தேயு 22:37-39) மனிதவர்க்கத்தினிடமாக யெகோவா வெளிப்படுத்திக் காண்பிக்கும் அன்பு இதுதான். (யோவான் 3:16) யெகோவா காண்பிக்கும் அதேவகையான அன்பை நாம் நம் திருமணமான துணைவரிடமும் பிள்ளைகளிடமும் காண்பிக்கலாம் என்பது எவ்வளவு ஆச்சரியமாய் இருக்கிறது!—1 யோவான் 4:19.

11. அன்பு எவ்வாறு திருமணத்தின் நன்மைக்கென்று செயல்படுகிறது?

11 திருமணத்தில் இந்த உயர்வகையான அன்பு உண்மையில் ‘பூரண சற்குணத்தின் கட்டாக’ இருக்கிறது. (கொலோசெயர் 3:14) இது தம்பதியினரை ஒன்றுசேர்த்து இணைக்கிறது, தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் சிறந்ததைச் செய்வதற்கு விரும்பும்படி அவர்களை செய்விக்கிறது. குடும்பங்கள் கடினமான சூழ்நிலைகளை எதிர்ப்படுகையில், ஒற்றுமையாய்க் காரியங்களைக் கையாளுவதற்கு அன்பு அவர்களுக்கு உதவுகிறது. தம்பதியினர் முதியோராகையில், ஒருவரையொருவர் ஆதரித்து ஒருவரையொருவர் தொடர்ந்து உயர்வாய் போற்றும்படி அன்பு அவர்களுக்கு உதவிசெய்கிறது. “அன்பு தற்பொழிவை நாடாது . . . சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது.”—1 கொரிந்தியர் 13:4-8.

12. திருமணமான தம்பதி கடவுள் பேரில் வைத்திருக்கும் அன்பு ஏன் திருமணத்தைப் பலப்படுத்துகிறது?

12 திருமணமான துணைவர்களுக்கிடையே நிலவும் அன்பின் காரணமாக மட்டுமல்லாமல், முக்கியமாக யெகோவாவின் பேரிலுள்ள அன்பினால் திருமண பிணைப்பு உறுதிசெய்யப்பட்டிருந்தால் அது விசேஷமாய் பலமுள்ளதாக இருக்கிறது. (பிரசங்கி 4:9-12) ஏன்? அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார்: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்.” (1 யோவான் 5:3) ஆகையால், தம்பதிகள் தங்கள் பிள்ளைகளை தேவபக்தியில் பயிற்றுவிக்க வேண்டும், தங்கள் பிள்ளைகளை வெகுவாய் நேசிப்பதன் காரணமாக மட்டுமேயல்லாமல் இது யெகோவாவின் கட்டளையாய் இருப்பதால் அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டும். (உபாகமம் 6:6, 7) அவர்கள் ஒழுக்கக்கேட்டைத் தவிர்க்க வேண்டும், ஒருவரையொருவர் நேசிப்பதன் காரணமாக மட்டுமே அவ்வாறு செய்யாமல், முக்கியமாக அவர்கள் யெகோவாவை நேசிப்பதன் காரணத்தால் அவ்வாறு செய்ய வேண்டும், ஏனென்றால் யெகோவா ‘வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் நியாயந்தீர்ப்பார்.’ (எபிரெயர் 13:4) திருமணத்தில் ஒரு துணைவர் மட்டுமே கடுமையான பிரச்சினைகளை உண்டாக்கினாலும், மற்றொரு துணைவர் பைபிள் நியமங்களைத் தொடர்ந்து பின்பற்றும்படி யெகோவாவின் பேரிலுள்ள அன்பு அவரைத் தூண்டுவிக்கும். ஒருவர் பேரில் ஒருவர் வைத்திருக்கும் அன்பு, யெகோவாவின் பேரிலுள்ள அன்போடு உறுதிசெய்யப்பட்டிருக்கையில் அக்குடும்பங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியானவையாக இருக்கும்!

கடவுளுடைய சித்தத்தைச் செய்யும் குடும்பம்

13. தனிப்பட்ட நபர்கள் மெய்யாகவே முக்கியமாய் இருக்கும் காரியங்களின் பேரில் தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு, கடவுளுடைய சித்தத்தைச் செய்ய தீர்மானமாயிருப்பது எவ்வாறு உதவும்?

13 ஒரு கிறிஸ்தவனின் முழு வாழ்க்கையும் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதையே மையமாகக் கொண்டு சுழலுகிறது. (சங்கீதம் 143:10) தேவபக்தி என்பது உண்மையில் இதைத் தான் அர்த்தப்படுத்துகிறது. மெய்யாகவே முக்கியமாயிருக்கும் காரியங்களின் பேரில் தங்கள் கவனத்தை வைப்பதற்கு கடவுளுடைய சித்தத்தைச் செய்வது குடும்பங்களுக்கு உதவிசெய்கிறது. (பிலிப்பியர் 1:9, 10) உதாரணமாக, இயேசு எச்சரித்தார்: “எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.” (மத்தேயு 10:35, 36) இயேசுவின் எச்சரிப்பு உண்மையாய் நிரூபித்திருக்கிறது, அவரைப் பின்பற்றுகிறவர்கள் அநேகர் குடும்ப அங்கத்தினர்களால் துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர். என்னே ஒரு வருத்தமான, வேதனை தரும் நிலை! அப்படியிருந்தாலும், யெகோவா தேவன் பேரிலும் இயேசு கிறிஸ்துவின் பேரிலும் நாம் வைத்திருக்கும் அன்பைவிட குடும்ப பிணைப்புகள்மீது வைத்திருக்கும் அன்பு அதிகமாய் இருக்கக்கூடாது. (மத்தேயு 10:37-39) குடும்ப எதிர்ப்பின் மத்தியிலும் ஒருவர் சகித்திருந்தால், எதிர்ப்பவர்கள் தேவபக்தியின் நல்ல விளைவுகளைக் கண்டு மாற்றமடையலாம். (1 கொரிந்தியர் 7:12-16; 1 பேதுரு 3:1, 2) அது நடைபெறவில்லையென்றாலும்கூட, எதிர்ப்பின் காரணமாக கடவுளைச் சேவிப்பதை நிறுத்திவிடுவதன்மூலம் நிலையான நன்மை எதுவும் நாம் அடைந்துவிடப் போவதில்லை.

14. கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கான விருப்பம், தங்கள் பிள்ளைகளின் நன்மைக்கென்று செயல்படுவதற்கு பெற்றோருக்கு எவ்வாறு உதவும்?

14 பெற்றோர் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு கடவுளுடைய சித்தத்தைச் செய்வது உதவிசெய்கிறது. உதாரணமாக, சில சமுதாயங்களில் உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை முதலீடாக கருதும் இயல்புள்ளவர்களாய் இருக்கின்றனர், ஆகவே முதிர்வயதில் தங்கள் பிள்ளைகள் தங்களைக் கவனித்துக்கொள்வார்கள் என்று அவர்கள்மீது சார்ந்திருக்கின்றனர். வயதாகிக்கொண்டே செல்லும் தங்கள் பெற்றோரை வளர்ந்த பிள்ளைகள் கவனித்துக்கொள்வது சரியான காரியமாய் இருந்தாலும், அப்படி சிந்திப்பது, பிள்ளைகள் பொருளாசைகொண்ட வாழ்க்கைமுறையைப் பின்தொடரும்படி பெற்றோர் உற்சாகப்படுத்துவதாய் இருக்கக்கூடாது. ஆவிக்குரிய காரியங்களைக் காட்டிலும் பொருளாதார உடைமைகளை அதிகமாக மதிக்கும்படி பிள்ளைகளைப் பெற்றோர் வளர்த்து வந்தால் அது பிள்ளைகளுக்கு பிரயோஜனமாய் இருக்காது.—1 தீமோத்தேயு 6:9.

15. கடவுளுடைய சித்தத்தைச் செய்யும் பெற்றோருக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக தீமோத்தேயுவின் தாயாகிய ஐனிக்கேயாள் எவ்வாறு இருந்தார்?

15 பவுலின் இளம் நண்பனாயிருந்த தீமோத்தேயுவின் தாய் ஐனிக்கேயாள் இந்த விஷயத்தில் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். (2 தீமோத்தேயு 1:5) ஐனிக்கேயாள் அவிசுவாசியைத் திருமணம் செய்துகொண்டிருந்தாலும், தீமோத்தேயுவின் பாட்டியம்மாவாகிய லோவிசாளோடுகூட சேர்ந்து தேவபக்தியை நோக்கமாகக்கொண்ட வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்றவாறு தீமோத்தேயுவை வெற்றிகரமாக வளர்த்து வந்தார். (2 தீமோத்தேயு 3:14, 15) தீமோத்தேயு வயதுவந்தவரான போது, வீட்டை விட்டுச்சென்று பவுலின் மிஷனரி தோழனாக ராஜ்ய-பிரசங்கிப்பு வேலையை எடுத்துக்கொள்ளும்படி ஐனிக்கேயாள் அவரை அனுமதித்தார். (அப்போஸ்தலர் 16:1-5) தன் மகன் சிறப்புவாய்ந்த மிஷனரியாக ஆனபோது அவர் எவ்வளவு கிளர்ச்சியடைந்திருக்க வேண்டும்! வயதுவந்தவராக அவரிடமிருந்த தேவபக்தி ஆரம்பத்தில் அவர் பெற்றுக்கொண்ட பயிற்றுவிப்பை நன்றாய் பிரதிபலித்தது. நிச்சயமாகவே, தீமோத்தேயு தன்னுடன் வீட்டில் இல்லாததைக் குறித்து அவருடைய தாய் ஒருவேளை வருத்தப்பட்டாலும், அவருடைய உண்மையுள்ள ஊழியத்தைப் பற்றிய அறிக்கைகளை ஐனிக்கேயாள் கேட்டபோது திருப்தியும் சந்தோஷமும் அடைந்தார்கள்.—பிலிப்பியர் 2:19, 20.

குடும்பமும் உங்கள் எதிர்காலமும்

16. ஒரு மகனாக, இயேசு என்ன தகுதியான அக்கறையைக் காண்பித்தார், ஆனால் அவருடைய முக்கிய குறிக்கோள் என்னவாக இருந்தது?

16 இயேசு தேவபக்தியுள்ள குடும்பத்தில் வளர்ந்து வந்தார், வயதுவந்த மகனாக, தன் தாய்மீது அக்கறை காண்பித்தார். (லூக்கா 2:51, 52; யோவான் 19:26) என்றபோதிலும், கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுவதே இயேசுவின் முக்கிய குறிக்கோளாக இருந்தது, மானிடர்கள் நித்திய ஜீவனை அனுபவிப்பதற்கான வழியைத் திறந்துவைப்பதை இது உட்படுத்தியது. பாவமுள்ள மனிதவர்க்கத்துக்காக தம் பரிபூரண மானிட உயிரை மீட்கும்பொருளாக அளித்தபோது இதை அவர் செய்தார்.—மாற்கு 10:45; யோவான் 5:28, 29.

17. இயேசுவின் உண்மைத்தன்மையுள்ள வாழ்க்கைப்போக்கு, கடவுளுடைய சித்தத்தைச் செய்வோருக்கு என்ன மகத்தான எதிர்பார்ப்புகளைத் திறந்து வைத்தது?

17 இயேசு மரித்தப் பின்பு, யெகோவா அவரை பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பி பெரும் அதிகாரத்தை அவருக்கு அளித்தார், இறுதியில் அவரை பரலோக ராஜ்யத்தில் ராஜாவாக அமர்த்தினார். (மத்தேயு 28:18; ரோமர் 14:9; வெளிப்படுத்துதல் 11:15) அந்த ராஜ்யத்தில் அவரோடு சேர்ந்து ஆட்சிசெய்வதற்கென்று சில மானிடர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியத்தை இயேசுவின் பலி ஏற்படுத்தியது. பரதீஸிய நிலைமைகள் திரும்பவும் நிலைநாட்டப்பட்ட பூமியின்மீது பரிபூரண வாழ்க்கையை அனுபவிப்பதற்கு அது மீதமாயிருந்த நேர்மை இதயமுள்ள மனிதவர்க்கத்துக்கு வழியையும்கூட திறந்து வைத்தது. (வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1, 4; 21:3-5; 22:1-4) இந்த மகத்தான நற்செய்தியை நம் அயலாரிடம் சொல்வதே இன்று நாம் பெற்றிருக்கும் மிகப் பெரிய சிலாக்கியங்களில் ஒன்று.—மத்தேயு 24:14.

18. குடும்பங்களுக்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் என்ன நினைப்பூட்டுதலும் என்ன உற்சாகமும் அளிக்கப்பட்டிருக்கின்றன?

18 அப்போஸ்தலனாகிய பவுல் காண்பித்தபடி, தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்வது, “பின்வரும்” ஜீவனில் ஜனங்கள் அந்த ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக்கொள்ளலாம் என்ற வாக்கை அவர்களுக்கு அளிக்கிறது. நிச்சயமாகவே, மகிழ்ச்சியைக் கண்டடைவதற்கு இதுதானே மிகச் சிறந்த வழியாய் இருக்கிறது! “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என்பதை நினைவில் வையுங்கள். (1 யோவான் 2:17) எனவே, நீங்கள் ஒரு பிள்ளையாகவோ அல்லது பெற்றோராகவோ, ஒரு கணவனாகவோ அல்லது மனைவியாகவோ, அல்லது பிள்ளைகளையுடைய தனி நபராகவோ அல்லது பிள்ளைகளில்லாத தனி நபராகவோ இருந்தாலும்சரி, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கு முயற்சிசெய்யுங்கள். நீங்கள் அழுத்தத்தின்கீழ் இருந்தாலும்கூட அல்லது மிகவும் கடுமையான கஷ்டங்களை எதிர்ப்பட்டாலும்கூட, நீங்கள் ஜீவனுள்ள கடவுளுடைய ஊழியர் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். இப்படியாக, உங்கள் செயல்கள் யெகோவாவுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாக. (நீதிமொழிகள் 27:11) உங்கள் நடத்தை இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியையும் வரப்போகும் புதிய உலகில் நித்திய ஜீவனையும் பெற்றுக்கொள்வதில் விளைவடைவதாக!