Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 17

இயேசு எப்படிப்பட்டவர்?

இயேசு எப்படிப்பட்டவர்?

இயேசு சொன்ன விஷயங்களும் செய்த விஷயங்களும் அவருடைய குணங்களைக் காட்டுகின்றன. அவற்றைப் படித்தால் அவரிடமும் யெகோவாவிடமும் நம்மால் நெருங்கிப்போக முடியும். இயேசு காட்டிய அருமையான சில குணங்கள் என்ன? நாம் எப்படி அவரைப் போலவே நடந்துகொள்ளலாம்?

1. என்ன விதங்களில் இயேசு தன் அப்பாவைப் போல் இருக்கிறார்?

பரலோகத்தில் இயேசு கோடிக்கணக்கான வருஷங்களாகத் தன் அப்பாவுடன் இருந்தார், அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டார். அதனால், யோசனைகள், உணர்ச்சிகள், செயல்கள் என எல்லாவற்றிலும் அச்சு அசல் தன் அப்பாவைப் போலவே இருக்கிறார். (யோவான் 5:19-ஐ வாசியுங்கள்.) அதனால்தான், “என்னைப் பார்த்தவன் என் தகப்பனையும் பார்த்திருக்கிறான்” என்று சொன்னார். (யோவான் 14:9) இயேசுவைத் தெரிந்துகொண்டால் யெகோவாவையும் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு, மக்கள்மேல் இயேசு எவ்வளவு கரிசனை காட்டினார் என்று தெரிந்துகொள்ளும்போது யெகோவா உங்கள்மேல் எவ்வளவு கரிசனை காட்டுகிறார் என்றும் புரிந்துகொள்வீர்கள்.

2. யெகோவாமேல் அன்பு வைத்திருப்பதை இயேசு எப்படிக் காட்டினார்?

“தகப்பன்மேல் நான் அன்பு வைத்திருக்கிறேன் என்பதை உலகம் தெரிந்துகொள்வதற்காக என் தகப்பனின் கட்டளைப்படியே செய்கிறேன்” என்று இயேசு சொன்னார். (யோவான் 14:31) ரொம்பக் கஷ்டமான சூழ்நிலையில்கூட யெகோவா சொன்னதுபோல் அவர் நடந்தார். இப்படி, யெகோவாமேல் ரொம்ப அன்பு வைத்திருப்பதைக் காட்டினார். அவரைப் பற்றி எப்போதும் பேசினார். அவரிடம் நெருங்கிவர மக்களுக்கு உதவினார்.—யோவான் 14:23.

3. மக்கள்மேல் அன்பு வைத்திருப்பதை இயேசு எப்படிக் காட்டினார்?

இயேசு ‘மனுஷர்கள்மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருக்கிறார்.’ (நீதிமொழிகள் 8:31) அதை அவர் நிறைய விதங்களில் காட்டினார். உதாரணத்துக்கு, மக்களை உற்சாகப்படுத்தினார், தயங்காமல் அவர்களுக்கு உதவினார், பாரபட்சம் பார்க்காமல் அவர்களை மென்மையாக நடத்தினார், ஆறுதலாகப் பேசினார், நம்பிக்கை கொடுத்தார். அவர் செய்த அற்புதங்கள், அவருக்கு எவ்வளவு சக்தி இருந்தது என்பதை மட்டுமல்ல, மக்கள்மேல் எவ்வளவு கரிசனை இருந்தது என்பதையும் காட்டின. (மாற்கு 1:40-42) மனிதர்களுக்காகச் சித்திரவதையை அனுபவித்து தன் உயிரையே அவர் கொடுத்தார். அந்தளவுக்கு எல்லா மனிதர்கள்மேலும் அன்பு வைத்திருக்கிறார். சொல்லப்போனால், அவர் பேச்சைக் கேட்டு நடக்கிறவர்கள்மேல் இன்னும் அதிக அன்பு வைத்திருக்கிறார்.—யோவான் 15:13, 14-ஐ வாசியுங்கள்.

ஆராய்ந்து பார்க்கலாம்!

இயேசுவின் சுபாவத்தைப் பற்றியும், அவரைப் போலவே நீங்களும் எப்படி அன்பையும் தாராள குணத்தையும் காட்டலாம் என்றும் இப்போது பார்க்கலாம்.

4. இயேசு தன் அப்பாவை நேசிக்கிறார்

கடவுள்மேல் எப்படி அன்பு காட்டலாம் என்பதை இயேசுவைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள முடியும். லூக்கா 6:12-ஐயும் யோவான் 15:10; 17:26-ஐயும் வாசியுங்கள். ஒவ்வொரு வசனத்தையும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • இயேசுவைப் போலவே நாமும் யெகோவாமேல் எப்படி அன்பு காட்டலாம்?

இயேசு தன்னுடைய பரலோகத் தகப்பனை நேசித்தார், அடிக்கடி அவரிடம் ஜெபம் செய்தார்

5. இயேசு மக்கள்மேல் அக்கறை காட்டுகிறார்

இயேசு தன்னைவிட மற்றவர்கள்மேல் அதிக அக்கறை காட்டினார். களைப்பாக இருந்தபோதும் மக்களுக்காகத் தன் நேரத்தையும் சக்தியையும் செலவழித்தார். மாற்கு 6:30-44-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • இயேசு என்னென்ன விதங்களில் மக்கள்மேல் அக்கறை காட்டினார்?—வசனங்கள் 31, 34, 41, 42-ஐப் பாருங்கள்.

  • இயேசு ஏன் மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று நினைத்தார்?—வசனம் 34-ஐப் பாருங்கள்.

  • யெகோவாவின் குணங்களை இயேசு அப்படியே காட்டுவதால், இந்தப் பதிவிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • நாம் என்ன விதங்களில் இயேசுவைப்போல் மற்றவர்கள்மேல் அக்கறை காட்டலாம் என்று நினைக்கிறீர்கள்?

6. இயேசு தாராள மனமுள்ளவர்

இயேசுவிடம் நிறைய பணம் பொருள் இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்கும் மனம் இருந்தது. நாமும் மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்க வேண்டுமென்று அவர் சொல்லியிருக்கிறார். அப்போஸ்தலர் 20:35-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • நாம் என்ன செய்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்று இயேசு சொல்லியிருக்கிறார்?

வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • நம்மிடம் நிறைய காசு பணம் இல்லாவிட்டாலும் என்னென்ன விதங்களில் மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்கலாம்?

உங்களுக்குத் தெரியுமா?

நாம் இயேசுவின் மூலம் யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. (யோவான் 16:23, 24-ஐ வாசியுங்கள்.) அப்படிச் செய்தால், நாம் யெகோவாவின் நண்பராவதற்காக இயேசு செய்திருக்கும் உதவிக்கு நன்றி காட்டுவோம்.

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “கடவுளுக்கு என்மேல அக்கறை இருந்துச்சுனா இந்நேரம் என் கஷ்டத்த தீர்த்து வெச்சிருப்பாரு!”

  • யெகோவாவுக்கு நம்மேல் அக்கறை இருக்கிறது என்பதை இயேசு நடந்துகொண்ட விதம் எப்படிக் காட்டுகிறது?

சுருக்கம்

யெகோவாமேல் இயேசு அன்பு வைத்திருக்கிறார், மக்கள்மேலும் அவர் அன்பு வைத்திருக்கிறார். அவர் யெகோவாவைப் போலவே நடந்துகொள்கிறார். அதனால், இயேசுவைப் பற்றித் தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள, யெகோவாவைப் பற்றியும் நன்றாகத் தெரிந்துகொள்வீர்கள்.

ஞாபகம் வருகிறதா?

  • நாம் எப்படி இயேசுவைப் போலவே யெகோவாமேல் அன்பு காட்டலாம்?

  • நாம் எப்படி இயேசுவைப் போலவே மக்கள்மேல் அன்பு காட்டலாம்?

  • இயேசுவின் குணங்களில் உங்களுக்கு ரொம்பப் பிடித்தது எது?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

இயேசு காட்டிய எந்தெந்த குணங்களை நாமும் காட்டலாம் என்று பாருங்கள்.

“இயேசுவைப் பின்பற்றுங்கள்” (இயேசு—வழி, சத்தியம், வாழ்வு, பக்கம் 317)

இயேசுவின் மூலம் ஜெபம் செய்வது ஏன் முக்கியம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“ஏன் இயேசுவின் மூலம் ஜெபம் செய்ய வேண்டும்?” (ஆன்லைன் கட்டுரை)

இயேசு பார்ப்பதற்கு எப்படி இருந்தார் என்பதைப் பற்றி பைபிள் ஏதாவது சொல்கிறதா?

“இயேசு பார்ப்பதற்கு எப்படி இருந்தார்?” (ஆன்லைன் கட்டுரை)

பெண்களை இயேசு எப்படி நடத்தினார்? அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

“கடவுளுடைய பார்வையில் பெண்கள் மதிப்புக்குரியவர்கள்” (ஆன்லைன் கட்டுரை)