Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 102

யோவானுக்குக் கிடைத்த தரிசனங்கள்

யோவானுக்குக் கிடைத்த தரிசனங்கள்

அப்போஸ்தலன் யோவான் ஒரு கைதியாக பத்மு தீவில் இருந்தார். அப்போது, இயேசு அவருக்கு வரிசையாக 16 தரிசனங்களைக் காட்டினார். அதாவது, எதிர்காலத்தில் நடக்கப் போகிற விஷயங்களைப் படம்போல் காட்டினார். யெகோவாவின் பெயர் எப்படிப் பரிசுத்தப்படும், அவருடைய அரசாங்கம் எப்படி வரும், அவருடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் எப்படி பூமியிலும் நிறைவேறும் என்பதை இந்தத் தரிசனங்கள் காட்டின.

பரலோகத்தில் இருக்கிற ஒரு பிரகாசமான சிம்மாசனத்தில் யெகோவா உட்கார்ந்திருப்பதை ஒரு தரிசனத்தில் யோவான் பார்த்தார். வெள்ளை உடைகளைப் போட்டிருந்த 24 மூப்பர்கள் அவரைச் சுற்றி இருந்தார்கள். அவர்களுடைய தலைகளில் தங்கக் கிரீடங்கள் இருந்தன. அந்தச் சிம்மாசனத்திலிருந்து மின்னல் அடித்தது, இடி சத்தமும் கேட்டது. அந்த 24 மூப்பர்களும் யெகோவா முன்னால் மண்டிபோட்டு அவரை வணங்கினார்கள். இன்னொரு தரிசனத்தில், யெகோவாவை வணங்குகிற திரள் கூட்டமான மக்களை யோவான் பார்த்தார். அவர்கள் எல்லா தேசங்களையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்தவர்கள். அவர்களை ஆட்டுக்குட்டியானவர், அதாவது இயேசு நன்றாகக் கவனித்துக்கொண்டார். வாழ்வு தரும் தண்ணீர் இருக்கும் இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போனார். இன்னொரு தரிசனத்தில், 24 மூப்பர்களோடு இயேசு பரலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பிப்பதை யோவான் பார்த்தார். அடுத்த தரிசனத்தில், ராட்சதப் பாம்புடனும், அதாவது சாத்தானுடனும் அவனுடைய பேய்களுடனும் இயேசு போர் செய்வதை யோவான் பார்த்தார். அவர்களைப் பரலோகத்திலிருந்து பூமிக்கு இயேசு தள்ளினார்.

பிறகு, சீயோன் மலையில் ஆட்டுக்குட்டியானவரும் 1,44,000 பேரும் நிற்கிற அருமையான காட்சியை யோவான் பார்த்தார். ஒரு தேவதூதர் பூமியைச் சுற்றிலும் பறந்து, கடவுளுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்தும்படி மக்களிடம் சொல்வதையும் பார்த்தார்.

அடுத்த தரிசனத்தில், அர்மகெதோன் போரைப் பார்த்தார். அந்தப் போரில், இயேசுவும் அவருடைய படைவீரர்களும் சாத்தானுடைய பொல்லாத உலகத்தை ஜெயித்தார்கள். கடைசி தரிசனத்தில், பரலோகத்திலும் பூமியிலும் சமாதானம் இருப்பதை யோவான் பார்த்தார். சாத்தானும் அவனுடைய சந்ததியும் அடியோடு அழிந்துவிட்டார்கள். பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற எல்லாரும் யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்தி, அவரை மட்டுமே வணங்கினார்கள்.

“உனக்கும் பெண்ணுக்கும் உன் சந்ததிக்கும் அவள் சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.”—ஆதியாகமம் 3:15