Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 5

படைக்கும் வல்லமை—‘வானத்தையும் பூமியையும் படைத்தவர்’

படைக்கும் வல்லமை—‘வானத்தையும் பூமியையும் படைத்தவர்’

1, 2. சூரியன் எவ்வாறு யெகோவாவின் படைக்கும் வல்லமையை பறைசாற்றுகிறது?

 இரவுநேர குளிரில் நெருப்புக்கு பக்கத்தில் நீங்கள் எப்போதாவது நின்றதுண்டா? நீங்கள் நெருப்பிலிருந்து சரியான தூரத்தில் கைகளை நீட்டி குளிர் காய்ந்திருப்பீர்கள். மிக அருகில் சென்றிருந்தால் சூட்டை தாங்க முடிந்திருக்காது. மிக தொலைவில் சென்றிருந்தால் ஜில்லென்ற குளிர் காற்றில் உடல் விறைக்க ஆரம்பித்திருக்கும்.

2 பகலில் நம் உடலை வெதுவெதுப்பாக்கும் “நெருப்பு” ஒன்று இருக்கிறது. அந்த “நெருப்பு” சுமார் 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் எரிந்துகொண்டிருக்கிறது! a சூரியனுக்குத்தான் எவ்வளவு சக்தி, அவ்வளவு தூரத்திலிருந்தும் அதன் வெப்பத்தை உங்களால் உணர முடிகிறதே! இருந்தாலும், பிரமிக்கத்தக்க இந்த வெப்ப அணு உலையை பூமி மிகச் சரியான தூரத்தில் சுற்றிவருகிறது. வெகு அருகில் சுற்றினால் பூமியின் நீரெல்லாம் ஆவியாகிவிடும்; வெகு தூரத்தில் சுற்றினால் அதன் நீரெல்லாம் உறைந்துவிடும். மிதமிஞ்சிய இந்த இரண்டுமே நம் கிரகத்தை உயிர்வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக்கிவிடும். பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு சூரியவொளி அத்தியாவசியமாக இருக்கும் அதேசமயத்தில் சுத்தமாகவும் திறனுள்ளதாகவும் இருக்கிறது; இன்பத்தையும் அளிக்கிறது.—பிரசங்கி 11:7.

3. சூரியன் எந்த முக்கிய உண்மைக்கு சாட்சி பகருகிறது?

3 இருந்தாலும் பெரும்பாலானவர்கள், தங்கள் வாழ்க்கையே சூரியனை சார்ந்திருக்கிற போதிலும் அதை பொருட்படுத்துவது இல்லை. இவ்வாறு, சூரியன் கற்பிக்கும் பாடத்தை புரிந்துகொள்ள தவறிவிடுகிறார்கள். யெகோவாவை பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “நீங்கள்தான் வெளிச்சத்தையும் சூரியனையும் உண்டாக்கினீர்கள்.” (சங்கீதம் 74:16) ஆம், “வானத்தையும் பூமியையும் . . . படைத்த” யெகோவாவிற்கு சூரியன் மகிமை சேர்க்கிறது. (சங்கீதம் 19:1; 146:6) யெகோவாவின் அளவிட முடியாத படைக்கும் வல்லமையை வானில் பறைசாற்றும் எண்ணிலடங்கா படைப்புகளில் இது வெறுமனே ஒன்றுதான். அவற்றில் சிலவற்றை சற்று உன்னிப்பாக ஆராயலாம்; பிறகு, பூமியின்மீதும் அதில் செழித்தோங்கும் உயிர்வகைகள் மீதும் கவனத்தைத் திருப்பலாம்.

யெகோவா ‘வெளிச்சத்தையும் சூரியனையும் உண்டாக்கினார்’

“வானத்தை அண்ணாந்து பாருங்கள்”

4, 5. சூரியன் எந்தளவு சக்தி வாய்ந்தது, எவ்வளவு பெரியது, இருந்தாலும் மற்ற நட்சத்திரங்களோடு ஒப்பிட அது எப்படிப்பட்டது?

4 சூரியன் ஒரு நட்சத்திரமே என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இரவில் நாம் பார்க்கும் நட்சத்திரங்களோடு ஒப்பிட அது பூமிக்கு மிக அருகில் இருக்கிறது, ஆகவேதான் பெரியதாக தோன்றுகிறது. அது எந்தளவு சக்தி வாய்ந்தது? சூரியனின் மையப்பகுதியிலுள்ள வெப்பம் சுமார் 1.5 கோடி டிகிரி செல்சியஸாகும். அதன் மையப்பகுதியிலிருந்து குண்டூசித் தலையளவு பகுதியை எடுத்து இந்தப் பூமியில் வைத்தால், அச்சின்னஞ்சிறு துண்டிலிருந்து 140 கிலோமீட்டர் தள்ளி நின்றால்தான் அதன் வெப்பத்தின் கடுமையிலிருந்து தப்ப முடியும்! ஒவ்வொரு விநாடியும் சூரியன் வெளிவிடும் ஆற்றல், நூறு கோடிக்கணக்கான அணுகுண்டுகள் வெடிப்பதற்கு சமமாகும்.

5 சூரியன் மிகவும் பிரமாண்டமானது, 13,00,000-த்திற்கும் அதிகமான பூமிகள் அதற்குள் அடங்கிவிடும். சூரியன்தான் எல்லாவற்றிலும் பெரிய நட்சத்திரமா? இல்லை, வானாராய்ச்சியாளர்கள் அதை மஞ்சள் நிற குட்டி நட்சத்திரம் (yellow dwarf) என்கின்றனர். “மகிமையில் நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் வேறுபடுகிறது” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 15:41) ஏவுதலால் எழுதிய அந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என அவர் அறிந்திருக்க மாட்டார். மிகப் பெரிய நட்சத்திரம் ஒன்று இருக்கிறது; அதை சூரியன் இருக்கும் இடத்தில் வைத்தால் நம் பூமியே அதற்குள் அடங்கிவிடும். அதைவிட மாபெரும் நட்சத்திரமும் இருக்கிறது; அதையும் சூரியன் இருக்கும் இடத்தில் வைத்தால், சனிக்கிரகம்கூட அதற்குள் அடங்கிவிடும்; இத்தனைக்கும் இந்த சனிக்கிரகம் பூமியிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது தெரியுமா? சக்தி வாய்ந்த கைத் துப்பாக்கியிலிருந்து பாய்ந்து செல்லும் குண்டைவிட 40 மடங்கு அதிவேகமாக பயணித்த ஒரு விண்வெளிக் கலம் அதை அடைவதற்கு நான்கு வருடங்கள் எடுத்தது!

6. மனித கண்ணோட்டத்தில் நட்சத்திரங்களின் எண்ணிக்கை திரளானது என்பதை பைபிள் எப்படி காட்டுகிறது?

6 நட்சத்திரங்களின் அளவைவிட வெகு பிரமிப்பூட்டுவது அவற்றின் எண்ணிக்கையாகும். சொல்லப்போனால், நட்சத்திரங்கள் எண்ண முடியாதவை என்றும் ‘கடற்கரை மணல்’ போன்று எண்ணுவதற்கு கடினமானவை என்றும் பைபிள் குறிப்பிடுகிறது. (எரேமியா 33:22) கண்களால் காண முடிந்ததற்கும் வெகு அதிகமான நட்சத்திரங்கள் இருப்பதை அந்தக் கூற்று தெரியப்படுத்துகிறது. எரேமியாவைப் போன்ற பைபிள் எழுத்தாளர் இரவில் வானத்தை ஏறெடுத்துப் பார்த்து நட்சத்திரங்களை எண்ண முயன்றிருந்தால், ஏறக்குறைய மூவாயிரத்தைத்தான் எண்ணியிருக்க முடியும்; ஏனெனில் தெளிவான இரவுநேர வானில் சாதாரண மனித கண்களுக்கு தென்படுவது அவ்வளவு மட்டுமே. அது, கையளவு மண்ணிலுள்ள துகள்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கலாம். எனினும் உண்மையில் நட்சத்திரங்களின் எண்ணிக்கை கடற்கரை மணல் போன்று எண்ணிலடங்காதது. b அவற்றை யாரால் எண்ண முடியும்?

“அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார்”

7. நமது பால்வீதி மண்டலத்தில் இருக்கிற நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப் பற்றியும், பிரபஞ்சத்தில் இருக்கிற நட்சத்திர மண்டலங்களின் எண்ணிக்கையைப் பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

7 ஏசாயா 40:26 விடையளிக்கிறது: “வானத்தை அண்ணாந்து பாருங்கள். அங்கே இருக்கும் நட்சத்திரங்களைப் படைத்தது யார்? அவற்றை ஒவ்வொன்றாக எண்ணி ஒரு படைபோல் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிற கடவுள்தான் அவர். அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார்.” சங்கீதம் 147:4 சொல்கிறபடி, “நட்சத்திரங்களை அவர் எண்ணுகிறார்.” அப்படியென்றால் எவ்வளவு ‘நட்சத்திரங்கள்’ இருக்கின்றன? இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது எளிதல்ல. நம் பால்வீதி மண்டலத்தில் மாத்திரமே 10,000 கோடிக்கும் அதிகமான நட்சத்திரங்கள் இருப்பதாக வானாராய்ச்சியாளர்கள் கணக்கிட்டிருக்கின்றனர். c இதைவிட பலமடங்கு அதிகமாகக்கூட இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் இது ஒரேவொரு நட்சத்திர மண்டலம்தான்; மற்றவற்றில் இன்னும் திரளான நட்சத்திரங்கள் இருக்கின்றன. எத்தனை நட்சத்திர மண்டலங்கள் இருக்கின்றன? பல ஆயிரக்கணக்கான கோடிகள் இருக்கலாம் என்று வானாராய்ச்சியாளர்கள் கணக்கிட்டிருக்கின்றனர். ஆகவே மனிதனால் நட்சத்திர மண்டலங்களின் எண்ணிக்கையைக்கூட திட்டவட்டமாய் சொல்ல முடியாததுபோல் தெரிகிறது; அப்படியிருக்கையில் அவற்றில் இருக்கும் கோடானு கோடி நட்சத்திரங்களின் எண்ணிக்கையை எப்படி துல்லியமாக சொல்ல முடியும்? இருந்தாலும் யெகோவாவிற்கு அந்த எண்ணிக்கை தெரியும். அதுமட்டுமா, அவர் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் பெயர் சொல்லி அழைக்கிறாரே!

8. (அ) பால்வீதி மண்டலத்தின் அளவை எப்படி விளக்குவீர்கள்? (ஆ) வான்கோள்களின் அசைவுகளை யெகோவா எதன் அடிப்படையில் நிர்ணயிக்கிறார்?

8 நட்சத்திர மண்டலங்களின் அளவு பற்றி சிந்திக்கையில் அதை உண்டாக்கினவர்மீது பயபக்தியும் பிரமிப்பும் நிச்சயமாக அதிகரிக்கிறது. பால்வீதி மண்டலத்தின் குறுக்களவு சுமார் 1,00,000 ஒளியாண்டுகள் என கணக்கிடப்பட்டிருக்கிறது. விநாடிக்கு 3,00,000 கிலோமீட்டர் என்ற அசுர வேகத்தில் ஓர் ஒளிக்கதிர் பயணிப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அது நம் பால்வீதி மண்டலத்தை கடப்பதற்கு 1,00,000 ஆண்டுகள் எடுக்கும்! சில நட்சத்திர மண்டலங்கள் நம்முடையதைவிட பல மடங்கு பெரியவை. யெகோவா இந்த பிரமாண்டமான “வானத்தை” துணிபோல் விரித்திருப்பதாக பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 104:2) இவற்றின் அசைவுகளையும் அவர் நிர்ணயிக்கிறார். நட்சத்திரங்களுக்கு இடையிலுள்ள சின்னஞ்சிறு தூசி முதல் மிகப் பிரமாண்டமான நட்சத்திர மண்டலம் வரை அனைத்தும் கடவுள் இயற்றி, செயல்படுத்தியிருக்கும் இயற்பியல் சட்டங்களின் அடிப்படையில் இயங்குகின்றன. (யோபு 38:31-33) இந்த வான் கோள்களின் துல்லியமான இயக்கங்களை விஞ்ஞானிகள் சிக்கலான நடன அசைவுகளுக்கு ஒப்பிட்டிருக்கின்றனர்! அப்படியென்றால் இவற்றை படைத்தவரை பற்றி யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட மகத்தான படைக்கும் வல்லமையை பெற்றிருக்கும் கடவுள்மீது பயபக்தியும் பிரமிப்பும் ஏற்படவில்லையா?

‘தன்னுடைய வல்லமையினால் பூமியைப் படைத்தவர்’

9, 10. சூரிய மண்டலம், வியாழன், பூமி, சந்திரன் ஆகியவை அமைந்திருக்கும் விதம் யெகோவாவின் வல்லமைக்கு எப்படி அத்தாட்சியளிக்கிறது?

9 யெகோவாவின் படைக்கும் வல்லமை நமது வீடாகிய பூமியில் தெளிவாக தெரிகிறது. அவர் இந்த பரந்த பிரபஞ்சத்தில் பூமியை மிகவும் சரியான இடத்தில் நிறுவியிருக்கிறார். உயிரினங்கள் நிறைந்த பூமியை போன்ற கிரகங்களுக்கு ஏற்ற சூழல் மற்ற அநேக நட்சத்திர மண்டலங்களில் ஒருவேளை இருக்காது என சில விஞ்ஞானிகள் நினைக்கின்றனர். நமது பால்வீதி மண்டலத்தின் பெரும்பகுதி உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடமாக வடிவமைக்கப்படவில்லை என தெரிகிறது. இம்மண்டலத்தின் மையப்பகுதி நட்சத்திரங்களால் நிரம்பியிருக்கிறது. அங்கு கதிர்வீச்சு மிக அதிகமாக இருக்கிறது, நட்சத்திரங்கள் மோதுமளவிற்கு நெருக்கமாக வருவதும் சகஜம். நட்சத்திர மண்டலத்தின் ஓரப்பகுதிகளிலோ உயிர் வாழ அவசியமான அநேக தனிமங்கள் கிடையாது. நம் சூரிய மண்டலம் நடுவிலும் இல்லாமல் ஓரத்திலும் இல்லாமல் மிக பொருத்தமான இடத்தில் அமைந்திருக்கிறது.

10 தொலைதூரத்திலிருக்கும் மாபெரும் வியாழன் கிரகத்தால் பூமி பயனையும் பாதுகாப்பையும் பெறுகிறது. பூமியைவிட ஆயிரத்திற்கும் அதிக மடங்கு பெரிதான வியாழன், பேரளவான ஈர்ப்பு சக்தியை செலுத்துகிறது. இதன் விளைவு என்ன? விண்வெளியில் வேகமாக பயணிக்கும் பொருட்களை அது ஈர்க்கிறது அல்லது திசைதிருப்பிவிடுகிறது. வியாழன் கிரகம் மட்டும் இல்லையென்றால் பூமியை சரமாரியாக தாக்கும் பெரிய விண்கற்கள், இப்போது ஏற்படுத்துவதைவிட 10,000 மடங்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும். அத்துடன், அருகிலிருக்கும் அசாதாரண துணைக்கோளாகிய சந்திரனாலும் நம் வீடாகிய பூமி பயனடைகிறது. சந்திரன் அழகு சிந்துவதோடும் இரவில் ஒளிவீசுவதோடும் மட்டுமல்லாமல், பூமி சீராகவும் நிலையாகவும் சாய்ந்து சுழல்வதற்கும் உதவுகிறது. இந்தச் சாய்வினால் பூமியில் நிலையான பருவகாலங்கள் ஏற்படுகின்றன; இது இங்குள்ள உயிர்களுக்கு மற்றொரு வரப்பிரசாதம்.

11. பூமியின் வளிமண்டலம் எவ்வாறு பாதுகாப்பு கவசம்போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது?

11 யெகோவாவின் படைக்கும் வல்லமை, பூமியினுடைய வடிவமைப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் மிளிருகிறது. பாதுகாப்பு கவசம்போல் செயல்படும் வளிமண்டலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சூரியக் கதிர்களில் சில நன்மை விளைவிப்பவை, மற்றவை தீங்கு விளைவிப்பவை. தீங்கு விளைவிக்கும் கதிர்கள் பூமியினுடைய வளிமண்டலத்தின் மேற்பகுதியை தாக்கும்போது, சாதாரண ஆக்ஸிஜனை ஓசோனாக அவை மாற்றுகின்றன. இதனால் ஏற்படும் ஓசோன் படலம் பெரும்பாலான அந்தக் கதிர்களை உறிஞ்சிக்கொள்கிறது. இவ்வாறு, நம் கிரகம் அதற்கே உரிய பாதுகாப்பு குடையோடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது!

12. நீர் சுழற்சி எவ்வாறு யெகோவாவின் படைக்கும் வல்லமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது?

12 இது நம் வளிமண்டலத்தின் ஒரு அம்சம் மட்டுமே; வளிமண்டலம் என்பது, பூமியின் மேற்பரப்பிலோ அதற்கு அருகிலோ வாழும் உயிரினங்களை ஆதரிப்பதற்கு ஏற்ற வாயுக்களின் சிக்கலான கலவையே. வளிமண்டலத்தின் அதிசயங்களில் ஒன்று நீர் சுழற்சி. ஒவ்வொரு வருடமும் பூமியிலுள்ள சமுத்திரங்களிலிருந்தும் கடல்களிலிருந்தும் 4,00,000 கிலோமீட்டர் கன அளவு தண்ணீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகிறது. அத்தண்ணீர் மேகங்களாகி, இம்மேகங்கள் காற்றால் நாலா திசைகளுக்கும் அடித்துச் செல்லப்படுகின்றன. இப்போது வடிகட்டி தூய்மையாக்கப்பட்ட இந்தத் தண்ணீர், மழையாகவும் பனியாகவும் பனிக்கட்டியாகவும் விழுந்து, பூமியின் நீர்நிலைகளை மீண்டும் நிரப்புகிறது. பிரசங்கி 1:7 சொல்கிறபடியே, “எல்லா ஆறுகளும் கடலில் போய்க் கலந்தாலும், கடல் நிரம்பி வழிவதில்லை. உற்பத்தியான இடத்துக்கே ஆறுகள் போகின்றன, அங்கிருந்து மறுபடியும் ஓடிவருகின்றன.” யெகோவாவால் மட்டுமே இப்படிப்பட்ட ஒரு சுழற்சியை உருவாக்க முடியும்.

13. பூமியின் தாவரங்களிலும் மண்ணிலும் படைப்பாளரின் வல்லமைக்கு என்ன அத்தாட்சியை காண்கிறோம்?

13 நாம் எங்கெல்லாம் உயிரைக் காண்கிறோமோ அங்கெல்லாம் படைப்பாளரின் வல்லமையைக் காண்கிறோம். 30 மாடிக் கட்டிடங்களைவிட உயரமான செக்கோயா மரம் முதல், நாம் சுவாசிப்பதற்கு தேவையான பெருமளவு ஆக்ஸிஜனை அளிப்பவையான சமுத்திரங்களில் கொழிக்கும் தாவர நுண்ணுயிர்கள் வரை அனைத்தும் யெகோவாவின் படைக்கும் வல்லமையை பறைசாற்றுகின்றன. மண்ணில்கூட வகை தொகையில்லா உயிரினங்கள் நிரம்பியிருக்கின்றன—புழுக்கள், காளான்கள், நுண்ணுயிர்கள் என அனைத்தும் சிக்கலான விதங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு தாவரங்கள் வளர உதவுகின்றன.

14. நுண்ணிய அணுவில்கூட எப்பேர்ப்பட்ட சக்தி அடங்கியிருக்கிறது?

14 யெகோவா “தன்னுடைய வல்லமையினால் பூமியைப் படைத்தார்” என்பதில் சந்தேகமில்லை. (எரேமியா 10:12) கடவுளுடைய வல்லமை அவரது மிகச் சிறிய படைப்புகளிலும் வெளிப்படுகிறது. உதாரணத்திற்கு, பத்து லட்சம் அணுக்களை அருகருகே வைத்தாலும் அது மனிதனுடைய ஒரு முடியின் பருமன்கூட இருக்காது. ஒரு அணுவை 14 மாடி கட்டிட உயரத்தின் அளவிற்கு பெரிதாக்கினாலும், அதன் கரு 7-வது மாடியில் இருக்கும் ஒரு உப்புத் துகளின் அளவுக்குத்தான் இருக்கும். இருந்தாலும், அணுகுண்டு வெடிப்பில் வெளிப்படும் பயங்கர சக்தி இந்த நுண்ணிய கருவில்தான் உள்ளது!

‘சுவாசமுள்ள எல்லா உயிர்களும்’

15. வெவ்வேறு காட்டு மிருகங்களை பற்றி குறிப்பிடுவதன் மூலம் யெகோவா என்ன பாடத்தை யோபுவிற்கு கற்பித்தார்?

15 யெகோவாவின் படைக்கும் வல்லமைக்கு மற்றொரு தெளிவான அத்தாட்சி பூமியிலுள்ள திரளான மிருக ஜீவன்களில் காணப்படுகிறது. யெகோவாவை துதிக்கும் அநேக காரியங்களை சங்கீதம் 148 பட்டியலிடுகிறது; 10-ம் வசனம், “காட்டு விலங்குகளே, வீட்டு விலங்குகளே” என்றும் குறிப்பிடுகிறது. படைப்பாளரிடம் மனிதன் ஏன் பயபக்தி காட்ட வேண்டுமென விளக்குகையில், யெகோவா ஒருமுறை யோபுவிடம் சில மிருகங்களைப் பற்றி பேசினார்; சிங்கம், வரிக்குதிரை, காட்டெருது, பிகெமோத் (அல்லது நீர்யானை), லிவியாதான் (முதலை) போன்றவற்றைக் குறிப்பிட்டார். அவர் சொல்ல வந்த குறிப்பு என்ன? இந்த ஆற்றல் மிகுந்த, அச்சந்தரும், அடக்க முடியாத பிராணிகளைக் கண்டே மனிதனுக்கு இந்தளவு பிரமிப்பு ஏற்படுகையில், அவற்றை படைத்தவரைக் கண்டு எந்தளவு பிரமிப்பும் பயபக்தியும் ஏற்பட வேண்டும்?—யோபு, அதிகாரங்கள் 38-41.

16. யெகோவா படைத்திருக்கும் சில பறவைகளை குறித்ததில் எது உங்கள் மனதை கவருகிறது?

16 சங்கீதம் 148:10 ‘சிறகடிக்கும் பறவைகளை’ பற்றியும் குறிப்பிடுகிறது. அதன் வகைகளை சற்று யோசித்துப் பாருங்கள்! “குதிரையையும் குதிரைவீரனையும் பார்த்து சிரிக்கிற” நெருப்புக்கோழியை பற்றி யெகோவா யோபுவிடம் சொன்னார். இரண்டரை மீட்டர் உயரமுள்ள இந்தப் பறவையால் பறக்க முடியாவிட்டாலும், மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் ஓட முடியும், அதுவும் ஒரே எட்டில் 4.5 மீட்டர் தூரத்தை தாண்ட முடியும்! (யோபு 39:13, 18) மறுபட்சத்தில் ஆல்பட்ராஸ் பறவை அதன் வாழ்நாளில் பெரும்பகுதியை கடலுக்கு மேலான காற்றுவெளியில்தான் கழிக்கிறது. இயற்கை க்ளைடரான இப்பறவையுடைய இறக்கையின் மொத்த நீளம் சுமார் 3 மீட்டர். இறக்கைகளை அடிக்காமலேயே மணிக்கணக்கில் அதனால் உயரே மிதக்க முடியும். இவற்றிற்கு நேர்மாறாக, வெறும் ஐந்து சென்டிமீட்டர் நீளமுள்ள வண்டு தேன்சிட்டு உலகிலேயே மிகச் சிறிய பறவையினம். விநாடிக்கு 80 தடவை என்ற கணக்கில் அதனால் படபடவென்று சிறகடிக்க முடியும்! சின்ன சிறகுகளுள்ள இரத்தினங்களை போல் ஜொலிக்கும் தேன்சிட்டுக்களால், ஹெலிகாப்டர்களை போல் அந்தரத்தில் தொங்க முடியும், பின்னோக்கியும் பறக்க முடியும்.

17. நீலத் திமிங்கலம் எவ்வளவு பெரியது, யெகோவா படைத்திருக்கும் மிருகங்களை சிந்தித்துப் பார்த்த பிறகு நாம் இயல்பாகவே என்ன முடிவுக்கு வர வேண்டும்?

17 ‘கடல் பிராணிகளும்’ யெகோவாவை துதிப்பதாக சங்கீதம் 148:7 சொல்கிறது. இக்கிரகத்தில் வாழ்ந்திருப்பதிலேயே மிகப் பெரிய மிருகம் என பெரும்பாலும் நம்பப்படும் நீலத் திமிங்கலத்தை (blue whale) எடுத்துக்கொள்ளுங்கள். ‘ஆழ்கடலில்’ வாழும் இந்த பெரிய விலங்கு, 30 மீட்டர் அல்லது அதற்கும் அதிக நீளத்திற்கு வளரும். முதிர்ச்சியடைந்த 30 யானைகளுக்கு சமமான எடையை அது பெறலாம். அதன் நாக்கு மட்டுமே ஒரு யானையின் எடைக்கு சமம். அதன் இருதயம் ஒரு சின்ன காரின் அளவுக்கு இருக்கும். இந்த மாபெரும் உறுப்பு நிமிடத்திற்கு 9 தடவை மட்டுமே துடிக்கும்; நிமிடத்திற்கு சுமார் 1,200 தடவை துடிக்கக்கூடிய தேன்சிட்டுக்களின் இருதயத்திலிருந்து எவ்வளவு வித்தியாசம்! நீலத் திமிங்கலத்தின் இரத்தக் குழாய்களில் குறைந்தது ஒன்றாவது, ஒரு பிள்ளையே அதற்குள் தவழ முடிந்தளவுக்கு பெரியது. “சுவாசமுள்ள எல்லா உயிர்களுமே ‘யா’வைப் புகழட்டும்” என்ற சங்கீத புத்தகத்தின் முடிவுரையை எதிரொலிக்க நம் இருதயம் நம்மை தூண்டுகிறதல்லவா?—சங்கீதம் 150:6.

யெகோவாவின் படைக்கும் வல்லமை புகட்டும் பாடம்

18, 19. யெகோவா இந்தப் பூமியில் படைத்திருக்கும் உயிரினங்கள் எந்தளவு பல்வகைப்பட்டவை, அவரது பேரரசுரிமையை பற்றி படைப்பு நமக்கு எதை கற்பிக்கிறது?

18 யெகோவா தமது படைக்கும் வல்லமையை பயன்படுத்துவதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன? படைப்பின் எண்ணிலடங்கா தினுசுகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. சங்கீதக்காரர் ஒருவர் இவ்வாறு வியந்துரைத்தார்: “யெகோவாவே, உங்களுடைய படைப்புகள்தான் எத்தனை எத்தனை! . . . பூமி உங்களுடைய படைப்புகளால் நிறைந்திருக்கிறது.” (சங்கீதம் 104:24) அது எவ்வளவு உண்மை! பூமியில் 10 லட்சத்திற்கும் அதிகமான உயிரினங்களை உயிரியல் நிபுணர்கள் கண்டிருக்கிறார்கள்; இருந்தாலும், அதற்கும் அதிகமான உயிரினங்கள் இருக்கலாம் என பலர் கருத்துக்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு மனித கலைஞன், சிலசமயம் தன் படைப்பாற்றல் வற்றிப்போனதுபோல் உணரலாம். ஆனால் யெகோவாவின் படைப்பாற்றலோ—பலதரப்பட்ட பொருட்களை புதிது புதிதாக புனைந்து படைக்கும் அவரது வல்லமையோ—துளியும் வற்றாதது.

19 யெகோவா தமது படைக்கும் வல்லமையை பயன்படுத்துவது, அவரது பேரரசுரிமையைப் பற்றி நமக்கு கற்பிக்கிறது. “படைப்பாளர்” என்ற வார்த்தைதானே, யெகோவாவை சர்வலோகத்தில் உள்ள மற்ற எல்லாவற்றிலிருந்தும் தனிப்படுத்திக் காட்டுகிறது; அவை அனைத்தும் “படைப்புகள்.” படைப்பில் யெகோவாவோடு “கைதேர்ந்த கலைஞனாக” பணிபுரிந்த அவருடைய ஒரே மகனைக்கூட, படைப்பாளர் என்றோ உடன்-படைப்பாளர் என்றோ பைபிளில் எங்கும் குறிப்பிடப்படுவதில்லை. (நீதிமொழிகள் 8:30; மத்தேயு 19:4) மாறாக, அவர் ‘படைப்புகளிலேயே முதல் படைப்பாக இருக்கிறார்.’ (கொலோசெயர் 1:15) யெகோவா படைப்பாளராக இருப்பதால், உன்னதப் பேரரசருக்கு உரிய தனிப்பட்ட அதிகாரத்தை செலுத்தும் உரிமையை அவர் பெற்றிருக்கிறார்.—ரோமர் 1:20; வெளிப்படுத்துதல் 4:11.

20. பூமிக்குரிய படைப்பு வேலைகளை முடித்த பிறகு யெகோவா எந்த அர்த்தத்தில் ஓய்வுற்றிருக்கிறார்?

20 யெகோவா தமது படைக்கும் வல்லமையை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டாரா? ஆறாவது படைப்பு நாளில் சிருஷ்டிப்பு வேலையை யெகோவா முடித்ததாக பைபிள் சொல்வது உண்மைதான்; யெகோவா “எல்லா வேலைகளையும் . . . முடித்துவிட்டு ஏழாம் நாளில் ஓய்வெடுக்கத் தொடங்கினார்” என அது சொல்கிறது. (ஆதியாகமம் 2:2) இந்த ஏழாம் ‘நாள்’ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடிப்பதாக அப்போஸ்தலனாகிய பவுல் சுட்டிக்காட்டினார்; ஏனெனில் அவர் வாழ்ந்த நாளிலும் அது நீடித்ததாக குறிப்பிட்டார். (எபிரெயர் 4:3-6) ஆனால் யெகோவா ஒரேயடியாக எல்லா வேலைகளையும் நிறுத்திவிட்டதாக இந்த ‘ஓய்வு’ அர்த்தப்படுத்துகிறதா? இல்லை, யெகோவா வேலை செய்வதை ஒருபோதும் நிறுத்துவதில்லை. (சங்கீதம் 92:4; யோவான் 5:17) அப்படியென்றால் அவரது ஓய்வு, பூமி சம்பந்தப்பட்டதில் அவரது சடப்பொருள் படைப்பு வேலை முடிவுற்றதையே குறிக்க வேண்டும். என்றாலும், தமது நோக்கங்களை நிறைவேற்றும் அவரது வேலை தடங்கலின்றி தொடர்ந்திருக்கிறது. அவற்றில் ஒன்று, வேதவசனங்களை ஏவி பதிவுசெய்ய வழிநடத்தியதாகும். ஒரு ‘புதிய படைப்பை’ உருவாக்குவதும் அவ்வேலைகளில் அடங்கும்; இதைப் பற்றி 19-ஆம் அதிகாரம் எடுத்துரைக்கும்.—2 கொரிந்தியர் 5:17.

21. யெகோவாவின் படைக்கும் வல்லமை உண்மையுள்ள மனிதர்களை நித்தியத்திற்கெல்லாம் எவ்வாறு பாதிக்கும்?

21 யெகோவாவின் ஓய்வுநாள் இறுதியில் முடிவுக்கு வரும்போது, ஆறு படைப்பு நாட்களின் முடிவில் சொன்னதுபோலவே, பூமியின் மீதுள்ள தமது அனைத்து வேலைகளையும் பார்த்து “மிகவும் நன்றாக இருந்தன” என அவரால் சொல்ல முடியும். (ஆதியாகமம் 1:31) அதன் பிறகு அவரது எல்லையற்ற படைக்கும் வல்லமையை எவ்விதத்தில் பயன்படுத்த தீர்மானிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எப்படியிருந்தாலும், யெகோவா தமது படைக்கும் வல்லமையை பயன்படுத்துவதை பார்த்து நாம் தொடர்ந்து அதிசயிப்போம் என்பதில் சந்தேகமில்லை. என்றென்றைக்கும் யெகோவாவை பற்றி அவரது படைப்பின் மூலம் அதிகம் கற்றுக்கொள்வோம். (பிரசங்கி 3:11) அவரை பற்றி அதிகமதிகமாக கற்றுக்கொள்கையில், அவர்மீது பயபக்தியும் பிரமிப்பும் தொடர்ந்து அதிகரிக்கும்; இதனால் நம் மகத்தான படைப்பாளரிடம் அதிகமதிகமாக நெருங்கி வருவோம்.

a இந்த மாபெரும் எண்ணை கிரகிப்பதற்கு இதை சிந்தித்துப் பாருங்கள்: அந்த தூரத்தை காரில் கடக்க வேண்டுமென்றால்—மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில், 24 மணிநேரம் ஓட்டிச்சென்றாலும்—நூறு வருடங்களுக்கு மேல் எடுக்கும்!

b பைபிள் காலங்களில் வாழ்ந்தவர்கள் பழம்பாணியான தொலைநோக்காடியை பயன்படுத்தியிருக்க வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். இல்லையென்றால் மனித கண்ணோட்டத்தில் நட்சத்திரங்கள் அவ்வளவு திரளானவை என அந்தப் பண்டைய காலத்தவருக்கு எப்படி தெரிந்திருக்க முடியும் என வாதாடுகின்றனர். இப்படிப்பட்ட ஆதாரமற்ற ஊகம், பைபிளின் ஆசிரியராகிய யெகோவாவை புறக்கணிக்கிறது.—2 தீமோத்தேயு 3:16.

c 10,000 கோடி நட்சத்திரங்களை வெறுமனே எண்ணுவதற்கு உங்களுக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என சிந்தித்துப் பாருங்கள். ஒரு விநாடிக்கு ஒரு நட்சத்திரம் என 24 மணிநேரமும் எண்ணிக்கொண்டே இருந்தால் சுமார் 3,171 ஆண்டுகள் எடுக்கும்!