Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 26

மீண்டும் பசுஞ்சோலை!

மீண்டும் பசுஞ்சோலை!

கிறிஸ்துவின் அரசாங்கம் மூலம் யெகோவா தமது பெயரைப் புனிதப்படுத்துகிறார், தமது ஆட்சியே நீதியான ஆட்சி என நிரூபிக்கிறார், தீமையை அடியோடு ஒழிக்கிறார்

பைபிளின் கடைசி புத்தகம்தான் வெளிப்படுத்துதல். இதில், மனிதகுலத்திற்கு நம்பிக்கையூட்டும் செய்தி இருக்கிறது. இதை எழுதியவர் அப்போஸ்தலன் யோவான்; யெகோவாவின் நோக்கம் நிறைவேறி வருவதைப் பற்றிய தரிசனங்கள் இப்புத்தகத்தில் உள்ளன.

முதல் தரிசனத்தில், சபைகளை இயேசு பாராட்டுகிறார், திருத்துகிறார். அடுத்த தரிசனம், நம்மை யெகோவாவின் சிம்மாசனத்திற்கு முன்னால் கொண்டுசெல்கிறது; அங்கே தூதர்கள் அவரைப் புகழ்ந்து பாடுகின்றனர்.

யெகோவாவின் நோக்கம் நிறைவேறி வருகையில், ஆட்டுக்குட்டியாகச் சித்தரிக்கப்படும் இயேசு கிறிஸ்து ஏழு முத்திரைகளைக் கொண்ட புத்தகச் சுருளை கையில் வாங்குகிறார். முதல் நான்கு முத்திரைகள் உடைக்கப்படும்போது, அடையாள அர்த்தமுடைய குதிரை வீரர்கள் உலக அரங்கில் தோன்றுகிறார்கள். முதலில், ராஜாவாக முடிசூட்டப்பட்ட இயேசு வெள்ளை குதிரையில் சவாரிசெய்து வருகிறார். அடுத்து வரும் குதிரை வீரர்கள் வெவ்வேறு நிறக் குதிரைகளில் சவாரி செய்கின்றனர்; இந்தக் குதிரை வீரர்கள் போர், பஞ்சம், கொள்ளைநோய்க்குப் படமாக இருக்கின்றனர். இவையாவும் இந்தப் பொல்லாத உலகத்தின் கடைசி நாட்களில் நிகழ்கின்றன. ஏழாவது முத்திரை திறக்கப்படுகையில், ஏழு எக்காள சத்தங்கள் முழங்குகின்றன; கடவுளுடைய நியாயத்தீர்ப்பு செய்திகள் அறிவிக்கப்படுவதற்கு இவை படமாக இருக்கின்றன. இதைத் தொடர்ந்து கடவுளுடைய கோபத்திற்கு அடையாளமாக ஏழு வாதைகள் உண்டாகின்றன.

புதிதாய் பிறந்த ஆண் குழந்தையாகச் சித்தரிக்கப்படும் கடவுளுடைய அரசாங்கம் விண்ணுலகில் ஸ்தாபிக்கப்படுகிறது. பின்பு அங்கே போர் வெடிக்கிறது, சாத்தானும் அவனைச் சேர்ந்த கெட்ட தூதர்களும் பூமிக்குத் தள்ளப்படுகின்றனர். ‘பூமிக்கு ஐயோ கேடு’ என்ற உரத்த குரல் கேட்கிறது. பிசாசு தனக்குக் கொஞ்சகாலமே இருப்பதை அறிந்திருப்பதால் சீற்றத்தோடு இருக்கிறான்.—வெளிப்படுத்துதல் 12:12.

ஆட்டுக்குட்டியாகச் சித்தரிக்கப்படுகிற இயேசுவுடன் 1,44,000 பேரை விண்ணுலகில் யோவான் பார்க்கிறார்; மனிதரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் இயேசுவுடன் “ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள்.” ஆகவே, வாக்குப்பண்ணப்பட்ட வாரிசுடன் சேர்ந்து ஆட்சி செய்யப்போகிறவர்கள் மொத்தம் 1,44,000 பேர் என வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 14:1; 20:6.

பூமியின் ஆட்சியாளர்கள் அர்மகெதோனுக்கு ஒன்றுகூடி வருகிறார்கள், அதாவது ‘சர்வ வல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போருக்கு’ ஒன்றுகூடி வருகிறார்கள். விண்ணுலக சேனை புடைசூழ வெள்ளை குதிரையில் அமர்ந்து வரும் இயேசுவுடன் இவர்கள் போர் புரிகிறார்கள். இந்த உலகத்தின் ஆட்சியாளர்கள் அனைவரும் அழிக்கப்படுகிறார்கள். சாத்தான் கட்டிப்போடப்படுகிறான், இயேசுவும் 1,44,000 பேரும் ‘ஆயிரம் வருடங்களுக்கு’ பூமியை அரசாளுகிறார்கள். ஆயிரமாண்டின் இறுதியில் சாத்தான் அழிக்கப்படுகிறான்.—வெளிப்படுத்துதல் 16:14; 20:4.

கீழ்ப்படிந்து நடக்கும் மனிதர்கள் ஆயிரமாண்டு ஆட்சியில் எப்படிப்பட்ட நிலைமையை அனுபவிப்பார்கள்? ‘அவர்களுடைய கண்ணீரையெல்லாம் [யெகோவா] துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்’ என்று யோவான் சொல்கிறார். (வெளிப்படுத்துதல் 21:4) இந்தப் பூமி பசுஞ்சோலையாக மாறுகிறது!

இப்படித்தான், பைபிள் சொல்லும் செய்தியை வெளிப்படுத்துதல் புத்தகம் நிறைவு செய்கிறது. மேசியாவின் அரசாங்கம் மூலம் யெகோவாவின் பெயர் புனிதமாக்கப்படுகிறது, அவருடைய ஆட்சியே நீதியான ஆட்சி என நித்திய காலத்திற்கும் நிரூபிக்கப்படுகிறது!

—ஆதாரம்: வெளிப்படுத்துதல் புத்தகம்.