Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | சண்டை சச்சரவு இல்லாத குடும்பம்...

பிரச்சினை பெரிதாகாமல் இருக்க...

பிரச்சினை பெரிதாகாமல் இருக்க...

“வீட்ல நாங்க எல்லாரும் அன்பா இருப்போம். யார் மனசையும் கஷ்டப்படுத்துற மாதிரி பேசக் கூடாதுன்னுதான் நினைப்போம். ஆனா, நாங்க சண்டை போடாத நாளே இல்லை! உங்க வீட்டு எங்க வீட்டு சண்டை இல்லை, அப்படி ஒரு சண்டை நடக்கும்! சிலநேரம் எதுக்கு சண்டை போடுறோம்னே தெரியாது!” என்று நீங்கள் யோசிக்கிறீர்களா?

குடும்பத்தில் சண்டை வந்தாலும் உங்களால் சமாதானமாக இருக்க முடியும். குடும்பம் என்ற தோட்டத்தில் தென்றல் வீசுமா, புயல் அடிக்குமா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் உங்களால் சமாளிக்க முடியும். எப்படி?

1. ஏட்டிக்குப்-போட்டி பேசாதீர்கள்.

இரண்டு பேரும் ஏட்டிக்குப்-போட்டி பேசிக்கொண்டே இருந்தால்தான் சண்டை வரும்; யாராவது ஒருவர் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும். கோபத்தில் கத்தினால், யாருமே உங்களை மதிக்க மாட்டார்கள். அதனால், உங்கள் கோபத்தை கிளறினாலும் பதிலுக்கு பதில் பேசாதீர்கள். யார் பேசி ஜெயிக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை, சண்டை இல்லாமல் சந்தோஷமாக இருப்பதுதான் முக்கியம்.

“நெருப்புக்கு விறகு இல்லாவிட்டால் அது அனைந்துபோகும். இதுபோலவே வம்பு இல்லாவிட்டால் வாதங்களும் முடிந்துபோகும்.” நீதிமொழிகள் 26:20, ஈஸி டு ரீட் வர்ஷன்.

2. காதுகொடுத்து கேளுங்கள், புரிந்து நடந்துகொள்ளுங்கள்.

ஒருவர் பேசும்போது குறுக்க குறுக்க பேசாதீர்கள்; பொறுமையாக கேளுங்கள். அப்படி செய்தால் சண்டையை மறந்து சீக்கிரமாக சமாதானம் ஆகிவிடலாம். எதையோ மனதில் வைத்துதான் இப்படி பேசுகிறார்கள் என்று நீங்களே முடிவு செய்யாதீர்கள். உண்மையிலேயே அவர்களுடைய மனதில் என்ன இருக்கிறது என்று புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். “அவர்/அவள் எப்படி அப்படி பேசலாம்?” என்று யோசிக்காதீர்கள். வேண்டுமென்றே எதையும் பேசியிருக்க மாட்டார்கள், யோசிக்காமல் பேசியிருப்பார்கள், அல்லது அவர்களுடைய மனம் காயப்பட்டதால் அப்படிப் பேசியிருப்பார்கள். அதைப் புரிந்து நடந்துகொள்ளுங்கள்.

“கனிவான பாசத்தையும் கரிசனையையும் கருணையையும் மனத்தாழ்மையையும் சாந்தத்தையும் நீடிய பொறுமையையும் காட்டுங்கள்.”கொலோசெயர் 3:12.

3. கோபம் வந்தால் அந்த இடத்தைவிட்டு போய்விடுங்கள்.

கோபம் வந்தால் அமைதியாக அந்த இடத்தைவிட்டுப் போய்விடுங்கள். ஒருவேளை, வேறொரு ரூமுக்கு போகலாம், கொஞ்ச தூரம் நடந்துவிட்டு வரலாம். ஆனால் அப்படி போவதால், “ஓடி ஒளியிறீங்க”, “முகத்தை தூக்கி வெச்சிக்கிறீங்க”, “பிடிவாதமா இருக்கீங்க” என்று அர்த்தமில்லை. அந்த மாதிரி நேரத்தில், கடவுளிடம் மனம்விட்டு பேசுங்கள்; பொறுமையாக இருப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் அவரிடம் உதவி கேளுங்கள்.

“சண்டை பெரிதாவதற்கு முன்னால் அந்த இடத்தைவிட்டுப் போய்விடுங்கள்.” நீதிமொழிகள் 17:14, NW.

4. என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று யோசித்து பேசுங்கள்.

வெடுக்-வெடுக்கென்று பேசினால் பிரச்சினை இன்னும் பெரிதாகும். ஆறுதலாகப் பேசினால், புண்பட்ட மனதிற்கு மருந்து போடுவது போல இருக்கும். அவர்களுடைய மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று நீங்களே முடிவு செய்யாதீர்கள், அவர்களிடமே கேளுங்கள். மனதில் இருப்பதை வெளிப்படையாக சொன்னதுக்காக நன்றி சொல்லுங்கள்.

“யோசிக்காமல் பேசுவது கத்திக்குத்துகள் போல் காயப்படுத்தும், ஞானமுள்ளவரின் பேச்சோ காயத்தை ஆற்றும்.”நீதிமொழிகள் 12:18, NW.

5. கத்தி, கூச்சல் போடாதீர்கள்.

நீங்கள் கத்தினால், பிறகு அவர்களும் கத்துவார்கள். உங்கள் மனம் காயப்பட்டிருந்தாலும் குத்தலாக பேசாதீர்கள், திட்டாதீர்கள். ‘என்மேல உங்களுக்கு கொஞ்சம்கூட அக்கறையே இல்லை’, ‘நான் சொல்றதை ஒருநாளாவது கேட்டிருக்கீங்களா?’ என்று சொல்லாதீர்கள். ‘நீங்க இப்படி சொன்னது எனக்கு கஷ்டமா இருந்தது’ என்று பொறுமையாக எடுத்து சொல்லுங்கள். எந்தவொரு சூழ்நிலையிலும் கைநீட்டி அடிக்காதீர்கள். அதேமாதிரி, தரக்குறைவாக பேசாதீர்கள், பட்டப்பெயர் வைத்து கூப்பிடாதீர்கள், மிரட்டாதீர்கள்.

‘கோபமும், மூர்க்கமும் அடையாதீர்கள். கோபத்தில் சத்தம் போடாதீர்கள். கடுஞ்சொற்களைச் சொல்லாதீர்கள்.’எபேசியர் 4:31, ஈஸி டு ரீட் வர்ஷன்.

6. உடனே மன்னிப்பு கேளுங்கள்; பிரச்சினையை சரிசெய்ய என்ன செய்யப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள்.

உங்கள் மனதை காயப்படுத்தியிருந்தால், அதைப் பற்றியே யோசிக்காதீர்கள். நடந்ததையே நினைத்துக்கொண்டிருந்தால் சண்டையை மறந்து சமாதானமாக முடியாது. யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்தால்தான் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியும். அதனால், சமாதானமாவதற்கு உங்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யுங்கள். “என்மேல எந்த தப்பும் இல்லையே!” என்று நீங்கள் நினைக்கலாம்; ஒருவேளை, கோபம் வருவது போல நீங்கள் ஏதாவது பேசியிருக்கலாம்... யோசிக்காமல் எதையாவது செய்திருக்கலாம்... அதற்காக மன்னிப்பு கேளுங்கள், நீங்களும் மன்னியுங்கள். கணவன்-மனைவி உறவு என்பது இந்த உலகத்திலேயே ரொம்ப அற்புதமான ஒரு உறவு! அதில் நீயா–நானா என்ற போட்டி இருக்கக் கூடாது. (g15-E 12)

“[உன் நண்பனிடம்] பணிவாக நடந்துகொள். விடாமல் கெஞ்சிக்கொண்டே இரு.”நீதிமொழிகள் 6:3, NW.

சண்டையை மறந்து சமாதானமான பிறகு என்ன செய்ய வேண்டும்? திரும்ப சண்டை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அடுத்தக் கட்டுரையில் இதைப் பற்றி இருக்கிறது.