உங்களுக்கு நினைவிருக்கிறதா?

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளிவந்த காவற்கோபுர இதழ்களை வாசித்து மகிழ்ந்தீர்களா? அப்படியானால் பின்வரும் கேள்விகளுக்கு பதில் தெரியுமா என பாருங்களேன்:

ஒருவருடன் மனத்தாங்கல் இருந்தால் அதை தீர்த்துக்கொள்ள எதை புரிந்துகொள்வது முக்கியம்?

கெட்ட எண்ணங்களும் மனப்பான்மைகளும் நம்மில் எவருக்குமே வரக்கூடியதுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், பிரச்சினைக்கு காரணம் எப்போதுமே மற்றவர்களல்ல, நாமாகவும் இருக்கலாம் என்பதைப் பகுத்துணரவும் வேண்டும்.​—⁠8/15, பக்கம் 23.

அப்போஸ்தலர் 3:21-⁠ல் (NW) குறிப்பிடப்பட்டுள்ள “திரும்ப நிலைநாட்டப்படும் காலம்” எப்போது வரும்?

திரும்ப நிலைநாட்டப்படுதலுக்கு இரண்டு விதமான நிறைவேற்றம் உண்டு. முதலாவது, 1919-⁠ல் ஆவிக்குரிய பரதீஸ் நிலைநாட்டப்பட்டது முதற்கொண்டு நிறைவேறி வருகிறது. இரண்டாவது, பூமியில் சொல்லர்த்தமாக பரதீஸ் நிலைநாட்டப்படுகையில் நிறைவேறும்.​—⁠9/1, பக்கங்கள் 17, 18.

நீதிமொழிகள் 6:6-8-⁠ன்படி, எறும்புக்கு பிரபு இல்லாதிருந்தும் நமக்கு எப்படி நல்ல முன்மாதிரியை வைக்கிறது?

எறும்புகளின் குடும்பத்தில் ராணி எறும்பு இருப்பது உண்மைதான். ஆனால் அது முட்டையிடுவதாலும், அந்த குடும்பத்திற்கு தாயாக இருப்பதாலும்தான் ராணி என அழைக்கப்படுகிறது. எறும்புகள் தொடர்ந்து சுறுசுறுப்பாக வேலை செய்கின்றன. நாமும் நம் வேலையில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். மற்றவர்கள் பார்த்தாலும்சரி பார்க்காவிட்டாலும்சரி கடுமையாக உழைத்து, முன்னேறுவது அவசியம்.​—⁠9/15, பக்கம் 26.

போர்க்களத்தில் படுகாயமுற்று யோசியா மரித்தபோதிலும் அவர் “சமாதானத்தோடே” மரிப்பார் என 2 இராஜாக்கள் 22:20-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள உல்தாளின் தீர்க்கதரிசனம் உண்மையானதா?

உண்மையானது. பொ.ச.மு. 609-607-⁠ல் பாபிலோனியர்கள் எருசலேமை முற்றுகையிட்டு அழித்தபோது ஏற்பட்ட அந்த பொல்லாப்பிற்கு முன்பே யோசியா மரித்துவிட்டதால் ஒரு விதத்தில் சமாதானத்தோடுதான் அவர் மரித்தார்.​—⁠9/15, பக்கம் 30.

மனைவியை “நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் [“மலையாடும்,” NW] போலிருப்பாளாக” என சாலொமோன் வர்ணித்தது எப்படி பொருத்தமானது? (நீதிமொழிகள் 5:18, 19)

பெண் மலையாடு மென்மையான சுபாவமும் நளினமான தோற்றமும் உடையது. இருப்பினும் அது பாறை இடுக்குகளில், யாரும் செல்ல முடியாத மலைப்பாங்கான பகுதிகளில் குட்டிகளை ஈனுகிறது. இப்படிப்பட்ட இடங்களில் உணவு கிடைப்பது கஷ்டமானாலும் உயிர்வாழ்கிறது.​—⁠10/1, பக்கங்கள் 30, 31.

ஹென்ரி க்ரூ, ஜார்ஜ் ஸ்டார்ஸ் என்பவர்கள் யாவர்?

இவர்கள் இருவரும் 1800-களில் வாழ்ந்த ஆர்வமுள்ள பைபிள் மாணாக்கர்கள். திரித்துவம், ஆத்துமா அழியாமை, எரிநரகம் போன்ற போதனைகள் வேதப்பூர்வமற்றவை என்பதை க்ரூ கற்றறிந்தார். பூமியில் சிலர் நித்திய வாழ்க்கையை அனுபவிப்பர் என்பதை ஸ்டார்ஸ் புரிந்துகொண்டார். 1879-⁠ல் இந்தப் பத்திரிகையை வெளியிட துவங்கிய சார்ல்ஸ் டேஸ் ரஸலுக்கு இவர்கள் இருவருமே முன்னோடிகள்.​—⁠10/15, பக்கங்கள் 26-30.

தங்கள் இரத்தத்தையே மீண்டும் உபயோகிக்கும் மருத்துவ முறையை யெகோவாவின் சாட்சிகள் எப்படி கருதுகின்றனர்?

பைபிளிடம் தங்களுக்கு இருக்கும் நம்பிக்கைகளுக்கு இசைய தங்கள் இரத்தத்தை அவர்கள் சேமித்து வைக்கவோ, பின்னர் அதையே ஏற்றிக் கொள்ளவோ மாட்டார்கள். அறுவை சிகிச்சையின் போது, மருத்துவ பரிசோதனையின் போது, அல்லது நவீன சிகிச்சையின் போது தன்னுடைய இரத்தம் எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு கிறிஸ்தவரின் தனிப்பட்ட தீர்மானம். கடவுளுக்கு தன்னை முழுமையாய் ஒப்புக்கொடுத்தவராக, இரத்தத்தைப் பற்றிய பைபிளின் கருத்தை அறிந்து தீர்மானம் எடுக்க வேண்டும்.​—⁠10/15, பக்கங்கள் 30, 31.

இந்த வருட தொடக்கத்தில் கணக்கெடுத்தபோது, உலகமுழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு எது முக்கியமாய் தேவைப்படுவதாக தெரிய வந்தது?

பொருளாதாரம் குறைவாக இருக்கும் நாடுகளில் 11,000-⁠க்கும் அதிகமான ராஜ்ய மன்றங்கள் தேவைப்படுகின்றன. பல தேசங்களிலுள்ள கிறிஸ்தவர்கள் தரும் நன்கொடைகள், வணக்க ஸ்தலங்கள் கட்டும் பணிக்குப் பயன்படுத்தப்படுகின்றன.​—⁠11/1, பக்கம் 30.

வணக்கம் சம்பந்தமாக பைபிளில் உபயோகிக்கப்பட்டிருக்கும் சில கிரேக்க வார்த்தைகள் யாவை?

லிட்டூர்ஜையா என்ற வார்த்தை “பொது சேவை” என்பதாகவும் லேட்ரியா என்ற மற்றொரு வார்த்தை “பரிசுத்த சேவை” என்பதாகவும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. (எபிரெயர் 10:11; லூக்கா 2:36, 37; NW)​—⁠11/15, பக்கங்கள் 11, 12.

ஆதாம் ஏவாள் பற்றிய பைபிள் பதிவிலிருந்து என்ன முக்கிய பாடத்தை கற்றுக்கொள்ளலாம்?

யெகோவா தேவனிடமிருந்து விலகி வாழ நினைப்பது படுமுட்டாள்தனம்.​—⁠11/15, பக்கங்கள் 24-7.

கடவுள் தம்முடைய ஊழியர்களைப் பலப்படுத்துகிறார் என்பதற்கு என்ன பைபிள் ஆதாரம் உள்ளது?

யெகோவா தேவன் ஊக்கமூட்டினார் அல்லது பலப்படுத்தினார் என்பதற்கு தாவீது, ஆபகூக், அப்போஸ்தலனாகிய பவுல் ஆகிய அனைவருமே தனிப்பட்ட விதத்தில் சான்றளித்தனர். (சங்கீதம் 60:12; ஆபகூக் 3:19; பிலிப்பியர் 4:13) எனவே, நம்மை பலப்படுத்த கடவுளுக்கு விருப்பம் இருக்கிறது, அப்படி செய்வார் என நாம் நம்பிக்கையோடிருக்கலாம்.​—⁠12/1, பக்கங்கள் 10, 11.