Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழித்தெழு! கைகொடுத்தது

விழித்தெழு! கைகொடுத்தது

விழித்தெழு! கைகொடுத்தது

பெனினிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

23 வயது நோயெல் தன் படிப்பை நிறுத்திவிட்டு யெகோவாவின் சாட்சிகளின் முழு நேர ஊழியராய் ஆவதற்குத் தீர்மானித்தார். இப்படி முழு நேர ஊழியராகிவிட்டால் நோயெல் எப்படிச் சொந்தக் காலில் நிற்க முடியும் என்று உறவினர்கள் எல்லாரும் பேசிக்கொண்டார்கள். தன் ஊழியத்திற்குத் துணைபுரியும் ஒரு பகுதி நேர வேலை தேடி நோயெல் ஏறி இறங்காத அலுவலகமே இல்லை. “வேலை கிடைக்க ஐந்து வழிகள்” என்ற கட்டுரை ஏற்ற சமயத்தில் விழித்தெழு!வில் வெளிவந்தது. a அவர் அதை திரும்பத்திரும்ப கவனமாய்ப் படித்தார். அது அவருக்கு உதவியதா? ஆம், உதவியது, ஆனால், அவர் நினைத்துப் பார்க்காத விதத்தில் உதவியது.

வீடு வீடாகச் சென்று நோயெல் ஊழியம் செய்துகொண்டிருந்ததை ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் முதல்வர் பார்த்து, ‘நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சியா’ என்று கேட்டார். ஆசிரியர் பணிக்காக அந்த முதல்வர் ஆள் தேடிக்கொண்டிருந்தார். யெகோவாவின் சாட்சிகளுக்கு கற்பிக்கும் திறன் இருப்பதை அவர் அறிந்திருந்தார். எனவே, ஆசிரியர் வேலை செய்ய விருப்பமுள்ள யாராவது தெரியுமா? என்று நோயெலிடம் கேட்டார். தெரியாது என்று நோயெல் சொன்னபோது, “நீங்கள் வருகிறீர்களா?” என்று கேட்டார்.

நோயெலுக்கு ஆசிரியராக வேலை செய்த அனுபவம் இல்லை, அதோடு, சில சமயங்களில் திக்கித்திக்கிப் பேசுவார். இது அவருக்கு ஒரு சவாலை முன்வைத்தது. ஏனென்றால், ஆசிரியர்கள் திக்காமல் பேசுகிறார்களா என பார்ப்பதற்கு பெனின் நாட்டு கல்வித் துறை ஒரு பரிட்சை நடத்தியது. எனவே, “நீங்கள் சான்றிதழ் பெற்றுக்கொண்டு வந்தால் உங்களுக்கு வேலை தருகிறேன்” என்றார் அந்தப் பள்ளி முதல்வர்.

தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் நோயெல் ஏற்கெனவே நல்ல பயிற்சி பெற்றிருந்தார். யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் வாரந்தோறும் நடத்தப்படும் இந்தப் பள்ளி, கூட்டத்தார் முன்பு பேசுவதற்குப் பயிற்சியளிக்கிறது. நோயெல் தன் சபையில் சொற்பொழிவும் ஆற்றியிருக்கிறார். ஆனாலும், பரிட்சைக்குச் சென்றபோது அவருடைய கைகாலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது.

தேர்வாளர் நோயெலிடம் ஒரு பத்திரிகையை நீட்டி, அதில் சிவப்பு நிறத்தில் இருந்த பாராவை வாசிக்கும்படி சொன்னார். நோயெலுக்கு ஆச்சரியம் தாளவில்லை. “வேலை கிடைக்க ஐந்து வழிகள்” என்ற கட்டுரையிலிருந்த பாராதான் அது. அவர் அந்தப் பாராவை சரளமாக வாசித்து சான்றிதழ் பெற்றுவிட்டார்!

யெகோவாவின் சாட்சிகளுடைய பத்திரிகைகளைத் தவறாமல் வாசிப்பதாக அந்தத் தேர்வாளர் நோயெலிடம் பிற்பாடு தெரிவித்தார். “இந்தப் பத்திரிகைகள் தகவல் நிறைந்தவை, அதன் எழுத்து நடையும் பிரமாதம். அதனால்தான் அவற்றை பரிட்சைகளுக்கு பயன்படுத்துகிறேன்” என்று விளக்கினார்.

நோயெல் அந்தப் பள்ளிக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அந்தப் பள்ளி முதல்வர் நோயெலை அடுத்த வருடத்திற்கும் வைத்துக்கொள்ள வேண்டுமென நினைத்தார். நோயெலுக்கோ வேறு திட்டங்கள் இருந்தன. யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் வேலை செய்ய அவருக்கு அழைப்பு வந்தது, இப்போது அவர் அங்கேதான் சேவைசெய்து வருகிறார். (g 9/08)

[அடிக்குறிப்பு]