யாத்திராகமம் 3:1-22

3  மோசே, மீதியான் தேசத்து குருவான தன்னுடைய மாமனார் எத்திரோவின்+ ஆடுகளை மேய்த்துவந்தார். அந்த ஆடுகளை வனாந்தரத்தின் மேற்குப் பக்கம் ஓட்டிக்கொண்டு போனபோது, உண்மைக் கடவுளின் மலையாகிய ஓரேபுக்கு+ வந்துசேர்ந்தார்.  அப்போது, கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த ஒரு முட்புதரின் நடுவில் யெகோவாவின் தூதர் அவருக்குத் தோன்றினார்.+ மோசே அந்த முட்புதரையே பார்த்தார். அது எரிந்துகொண்டிருந்தபோதிலும் கருகவே இல்லை.  அதனால் மோசே, “இந்த முட்புதர் கருகாமல் இருக்கிறதே! இந்த அற்புதக் காட்சியைப் பக்கத்தில் போய்ப் பார்க்க வேண்டும்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.  அவர் அதன் பக்கத்தில் வருவதை யெகோவா பார்த்தபோது அந்த முட்புதரிலிருந்து, “மோசே, மோசே” என்று கூப்பிட்டார். அதற்கு மோசே, “சொல்லுங்கள், எஜமானே!” என்றார்.  அப்போது கடவுள் அவரிடம், “பக்கத்தில் வராதே. உன் செருப்பைக் கழற்று. ஏனென்றால், நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது” என்றார்.  அதோடு, “நான் உன் முன்னோர்களான* ஆபிரகாமின் கடவுளாகவும்,+ ஈசாக்கின் கடவுளாகவும்,+ யாக்கோபின் கடவுளாகவும்+ இருக்கிறேன்” என்றார். உண்மைக் கடவுளைப் பார்க்க மோசே பயந்ததால் முகத்தை மூடிக்கொண்டார்.  அதன் பின்பு யெகோவா, “எகிப்தில் என்னுடைய ஜனங்கள் படுகிற கஷ்டத்தை நான் பார்த்தேன். வேலை வாங்குகிறவர்களுடைய கொடுமை தாங்காமல் அவர்கள் கதறுவதைக் கேட்டேன். அவர்களுடைய வலியும் வேதனையும் எனக்கு நன்றாகவே தெரியும்.+  நான் கீழே இறங்கிப் போய்* எகிப்தியர்களுடைய கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றி,+ பாலும் தேனும் ஓடுகிற நல்ல தேசத்துக்குக்+ கொண்டுபோவேன். கானானியர்களும் ஏத்தியர்களும் எமோரியர்களும் பெரிசியர்களும் ஏவியர்களும் எபூசியர்களும்+ வாழ்கிற மாபெரும் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன்.  இஸ்ரவேல் ஜனங்கள் கதறுவதை நான் கேட்டேன். எகிப்தியர்கள் அவர்களை எந்தளவுக்கு அடக்கி ஒடுக்குகிறார்கள் என்பதையும் பார்த்தேன்.+ 10  அதனால், இப்போது உன்னை பார்வோனிடம் அனுப்பப்போகிறேன். என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களை நீ எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வருவாய்”+ என்றார். 11  ஆனால் மோசே உண்மைக் கடவுளிடம், “பார்வோனிடம் போவதற்கும் எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களைக் கூட்டிக்கொண்டு வருவதற்கும் எனக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று கேட்டார். 12  அதற்கு அவர், “நான் உன்னோடு இருப்பேன்.+ என்னுடைய ஜனங்களை எகிப்திலிருந்து நீ கூட்டிக்கொண்டு வந்த பின்பு, உண்மைக் கடவுளாகிய என்னை நீங்கள் எல்லாரும் இந்த மலையில் வணங்குவீர்கள்.+ நான்தான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம்” என்றார். 13  ஆனால் மோசே உண்மைக் கடவுளிடம், “நான் இஸ்ரவேலர்களிடம் போய், ‘உங்கள் முன்னோர்களின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பினார்’ என்று சொல்லும்போது, ‘அவருடைய பெயர் என்ன?’+ என்று அவர்கள் கேட்டால் என்ன சொல்வது?” என்று கேட்டார். 14  அதற்குக் கடவுள், “நான் எப்படியெல்லாம் ஆக நினைக்கிறேனோ* அப்படியெல்லாம் ஆவேன்”*+ என்று சொன்னார். அதோடு, “நீ இஸ்ரவேலர்களிடம், ‘ஆவேன்’ என்பவர் உங்களிடம் என்னை அனுப்பியிருக்கிறார் என்று சொல்”+ என்றார். 15  கடவுள் மறுபடியும் மோசேயிடம், “‘உங்கள் முன்னோர்களான ஆபிரகாமின் கடவுளாகவும், ஈசாக்கின் கடவுளாகவும், யாக்கோபின் கடவுளாகவும் இருக்கிற யெகோவா+ உங்களிடம் என்னை அனுப்பியிருக்கிறார்’ என்று நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டும். என்றென்றும் இதுதான் என்னுடைய பெயர்.+ தலைமுறை தலைமுறையாக இந்தப் பெயரால்தான் ஜனங்கள் என்னை நினைத்துப் பார்ப்பார்கள். 16  இப்போது நீ போய் இஸ்ரவேலின் பெரியோர்களை* ஒன்றுகூட்டி, அவர்களிடம், ‘உங்கள் முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களின் கடவுளாகிய யெகோவா எனக்குத் தோன்றி இப்படிச் சொன்னார்: “எகிப்தில் உங்களுக்குச் செய்யப்படுகிற கொடுமைகளையும் நீங்கள் அனுபவிக்கிற கஷ்டங்களையும் நான் பார்த்தேன்.+ 17  அதனால், எகிப்தியர்களுடைய பிடியிலிருந்து உங்களை விடுதலை செய்து,+ கானானியர்களும் ஏத்தியர்களும் எமோரியர்களும்+ பெரிசியர்களும் ஏவியர்களும் எபூசியர்களும்+ வாழ்கிற தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன். அது பாலும் தேனும் ஓடுகிற தேசம்”’+ என்று சொல். 18  அவர்கள் நீ சொல்வதை நிச்சயம் கேட்பார்கள்.+ நீயும் இஸ்ரவேலின் பெரியோர்களும் எகிப்தின் ராஜாவிடம் போய், ‘எபிரெயர்களின் கடவுளாகிய யெகோவா+ எங்களிடம் பேசினார். நாங்கள் மூன்று நாட்கள் பயணம் செய்து, வனாந்தரத்தில் எங்களுடைய கடவுளாகிய யெகோவாவுக்குப் பலி கொடுக்க வேண்டும்.+ அதனால் தயவுசெய்து எங்களைப் போகவிடுங்கள்’ என்று கேட்க வேண்டும். 19  ஆனால், என்னுடைய கைபலத்தைக் காட்டினால்தான் எகிப்தின் ராஜா உங்களைப் போக விடுவான் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.+ 20  அதனால், அதிர வைக்கும் அற்புதங்களைச் செய்து எகிப்தைத் தாக்குவேன். அதன் பின்பு, அவன் உங்களை அனுப்பிவிடுவான்.+ 21  நீங்கள் அங்கிருந்து வெறுங்கையோடு வர மாட்டீர்கள். உங்களுக்கு வேண்டியதையெல்லாம் எகிப்தியர்கள் கொடுக்கும்படி செய்வேன்.+ 22  இஸ்ரவேல் பெண்கள் தங்களுடைய வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் இருக்கிற எகிப்தியப் பெண்களிடம், தங்கத்திலும் வெள்ளியிலும் செய்யப்பட்ட பொருள்களையும் துணிமணிகளையும் கேட்டு வாங்க வேண்டும். அவற்றைத் தங்களுடைய மகன்களுக்கும் மகள்களுக்கும் போட்டுவிட வேண்டும். இப்படி, நீங்கள் எகிப்தியர்களின் சொத்துகளை எடுத்துக்கொண்டு வர* வேண்டும்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “தகப்பனாகிய.”
வே.வா., “நான் என் கவனத்தைத் திருப்பி.”
இணைப்பு A4-ஐப் பாருங்கள்.
வே.வா., “விரும்புகிறேனோ.”
வே.வா., “மூப்பர்களை.”
வே.வா., “சொத்துகளைச் சூறையாட.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா