ஆதியாகமம் 32:1-32

32  பின்பு, யாக்கோபும் அங்கிருந்து புறப்பட்டுப் போனார். வழியில் தேவதூதர்கள் அவரைச் சந்தித்தார்கள்.  யாக்கோபு அவர்களைப் பார்த்தவுடன், “இதுதான் கடவுளுடைய முகாம்!” என்று சொல்லி, அந்த இடத்துக்கு மக்னாயீம்* என்று பெயர் வைத்தார்.  அதன்பின் யாக்கோபு, ஏதோமில் உள்ள+ சேயீர் தேசத்தில்+ இருந்த தன்னுடைய அண்ணன் ஏசாவைப் போய்ப் பார்க்கச் சொல்லி ஆட்களை* அனுப்பினார்.  அவர்களிடம், “நீங்கள் என்னுடைய எஜமான் ஏசாவிடம் போய், ‘உங்கள் அடிமை யாக்கோபு இப்படிச் சொல்லி அனுப்பியிருக்கிறார்: “நான் இத்தனை வருஷமாக+ லாபானுடன் தங்கியிருந்தேன்.  காளைகளையும் கழுதைகளையும் செம்மறியாடுகளையும் வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்திருக்கிறேன்.+ என் எஜமானே, உங்களுடைய கருணை கிடைப்பதற்காக இந்தச் செய்தியைச் சொல்லி அனுப்புகிறேன்” என்று சொல்லுங்கள்’” என்றார்.  அந்த ஆட்கள் யாக்கோபிடம் திரும்பி வந்து, “உங்கள் அண்ணன் ஏசாவை நாங்கள் பார்த்தோம், இப்போது அவர் உங்களைப் பார்ப்பதற்காக வந்துகொண்டிருக்கிறார், அவரோடு 400 பேர் வருகிறார்கள்”+ என்று சொன்னார்கள்.  அதைக் கேட்டதும் யாக்கோபு பயத்தில் பதறினார்.+ உடனே, தன்னுடன் இருந்தவர்களையும் ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும் மற்ற கால்நடைகளையும் இரண்டு கூட்டமாகப் பிரித்து,  “ஏசா ஒரு கூட்டத்தைத் தாக்கினாலும், இன்னொரு கூட்டத்தால் தப்பித்து ஓட முடியும்” என்றார்.  அதோடு கடவுளிடம், “யெகோவாவே, என் தாத்தா ஆபிரகாமின் கடவுளே, என் அப்பா ஈசாக்கின் கடவுளே, ‘உன்னுடைய தேசத்துக்குப் போய் உன் சொந்தக்காரர்களோடு குடியிரு, நான் உன்னை ஆசீர்வதிப்பேன்’ என்று சொன்னவரே,+ 10  உங்கள் அடிமையாகிய என்னிடம் நீங்கள் இவ்வளவு காலமாகக் காட்டிய மாறாத அன்புக்கும் உண்மைத்தன்மைக்கும்+ நான் தகுதி இல்லாதவன். இந்த யோர்தானைத் தாண்டிப் போனபோது என்னிடம் ஒரு தடி மட்டும்தான் இருந்தது, ஆனால் இப்போது இரண்டு பெரிய கூட்டங்களுக்குச் சொந்தக்காரனாக இருக்கிறேன்.+ 11  கடவுளே, உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன்,+ என் அண்ணன் ஏசாவிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். அவன் வந்து என்னையும் என் பிள்ளைகளையும் மனைவிகளையும் தீர்த்துக்கட்டிவிடுவானோ+ என்று பயமாக இருக்கிறது. 12  நீங்கள் என்னை ஆசீர்வதிப்பதாகவும், என்னுடைய சந்ததியை கடற்கரை மணலைப் போல எண்ண முடியாத அளவுக்குப் பெருக வைப்பதாகவும் சொன்னீர்களே”+ என்று ஜெபம் செய்தார். 13  அந்த ராத்திரி அவர் அங்கேயே தங்கினார். பின்பு, தன்னுடைய அண்ணன் ஏசாவுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு,+ 14  200 பெண் வெள்ளாடுகளையும், 20 வெள்ளாட்டுக் கடாக்களையும், 200 பெண் செம்மறியாடுகளையும், 20 செம்மறியாட்டுக் கடாக்களையும், 15  30 ஒட்டகங்களையும், அவற்றின் குட்டிகளையும், 40 பசுக்களையும், 10 காளைகளையும், 20 பெட்டைக் கழுதைகளையும், 10 ஆண் கழுதைகளையும் பிரித்தெடுத்தார்.+ 16  ஒவ்வொரு மந்தையையும் தன்னுடைய வேலைக்காரர்களிடம் தனித்தனியாக ஒப்படைத்து, “எனக்கு முன்னால் போங்கள், ஒவ்வொரு மந்தைக்கும் நடுவில் இடைவெளி விட்டு அவற்றை ஓட்டிக்கொண்டு போங்கள்” என்று சொன்னார். 17  அதோடு, முதலாம் வேலைக்காரனிடம், “ஒருவேளை என்னுடைய அண்ணன் ஏசா உன்னிடம் வந்து, ‘நீ யாருடைய வேலைக்காரன், எங்கே போகிறாய், உனக்கு முன்னால் போகிற இந்த மந்தை யாருடையது?’ என்று கேட்டால், 18  ‘உங்கள் அடிமை யாக்கோபுடையது. எஜமானாகிய ஏசாவுக்கு அன்பளிப்பாக அனுப்பினார்.+ அவரும் எங்களுக்குப் பின்னால் வருகிறார்’ என்று நீ சொல்ல வேண்டும்” என்றார். 19  அதுபோலவே, இரண்டாம் மூன்றாம் வேலைக்காரர்களிடமும் மந்தைகளுக்குப் பின்னால் போன மற்ற எல்லாரிடமும், “ஏசாவைப் பார்க்கும்போது இதேபோல் நீங்கள் சொல்ல வேண்டும். 20  ‘உங்கள் அடிமை யாக்கோபு எங்களுக்குப் பின்னால் வருகிறார்’ என்றும் சொல்ல வேண்டும்” என்றார். அதன்பின், ‘அன்பளிப்புகளை முதலில் அனுப்பி அவரைச் சமாதானப்படுத்தினால்,+ நான் அவரைப் பார்க்கும்போது ஒருவேளை அவர் என்னிடம் அன்பாக நடந்துகொள்வார்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். 21  இப்படி, அன்பளிப்புகளை முன்னால் அனுப்பிவிட்டு அன்றைக்கு ராத்திரி அங்கே அவர் தங்கினார். 22  அந்த ராத்திரியிலேயே அவர் எழுந்து தன்னுடைய இரண்டு மனைவிகளையும்+ இரண்டு வேலைக்காரிகளையும்+ 11 மகன்களையும் கூட்டிக்கொண்டு யாபோக்+ ஆற்றுத்துறையை* கடந்தார். 23  அவர்களையும் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் அவர் கரைசேர்த்தார்.* 24  கடைசியில், யாக்கோபு மட்டும் தனியாக இருந்தார். அப்போது, ஒரு மனிதர்* வந்து விடியற்காலைவரை அவரோடு போராடினார்.+ 25  யாக்கோபை ஜெயிக்க முடியாததால் அந்த மனிதர் அவருடைய இடுப்புமூட்டை* தொட்டார். அந்த மனிதரோடு போராடியதில் யாக்கோபின் இடுப்புமூட்டு பிசகியது.+ 26  அப்போது அந்த மனிதர் அவரிடம், “என்னைப் போகவிடு, விடிந்துவிட்டது” என்றார். அதற்கு அவர், “நீங்கள் என்னை ஆசீர்வதித்தால்தான் உங்களைப் போகவிடுவேன்”+ என்று சொன்னார். 27  அதனால் அந்த மனிதர், “உன்னுடைய பெயர் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர், “யாக்கோபு” என்றார். 28  அப்போது அந்த மனிதர், “இனிமேல் உன் பெயர் யாக்கோபு அல்ல, இஸ்ரவேல்.*+ ஏனென்றால், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி+ கடைசியில் ஜெயித்துவிட்டாய்” என்று சொன்னார். 29  அதற்கு யாக்கோபு, “உங்களுடைய பெயர் என்ன, தயவுசெய்து சொல்லுங்கள்” என்று கேட்டார். ஆனால் அந்த மனிதர், “என்னுடைய பெயரை எதற்காகக் கேட்கிறாய்?”+ என்றார். பின்பு, அவரை ஆசீர்வதித்தார். 30  அப்போது யாக்கோபு, “கடவுளுடைய* முகத்தை நேரில் பார்த்தேன், ஆனாலும் உயிர் பிழைத்தேன்”+ என்று சொல்லி, அந்த இடத்துக்கு பெனியேல்*+ என்று பெயர் வைத்தார். 31  அவர் பெனூவேலை* கடந்தவுடனே சூரியன் உதித்தது. அவர் நொண்டி நொண்டி நடந்துபோனார்.+ 32  ஏனென்றால், அந்த மனிதர் யாக்கோபுடைய இடுப்புமூட்டின் மேல் இருந்த தசைநாணைத் தொட்டிருந்தார். அதனால்தான் இடுப்புமூட்டின் மேல் உள்ள தசைநாணை இன்றுவரை இஸ்ரவேல் ஜனங்கள் சாப்பிடுவதில்லை.

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “இரண்டு முகாம்கள்.”
வே.வா., “தூதுவர்களை.”
ஜனங்கள் ஆற்றைக் கடக்கும் ஆழமில்லாத பகுதி.
வே.வா., “காட்டாற்றுப் பள்ளத்தாக்கைக் கடக்கப்பண்ணினார்.”
அதாவது, “மனித உருவில் ஒரு தேவதூதர்.”
வே.வா., “தொடைச்சந்தை.”
அர்த்தம், “கடவுளோடு போராடுபவர்; கடவுள் போராடுகிறார்.”
அதாவது, “கடவுளின் பிரதிநிதியான தூதருடைய.”
அர்த்தம், “கடவுளுடைய முகம்.”
அதாவது, “பெனியேலை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா