எண்ணாகமம் 5:1-31

5  பின்பு யெகோவா மோசேயிடம்,  “தொழுநோயாளிகளையும்+ பிறப்புறுப்பில் ஒழுக்கு நோய் உள்ளவர்களையும்+ பிணத்தால் தீட்டுப்பட்டவர்களையும்+ முகாமிலிருந்து அனுப்பிவிடும்படி இஸ்ரவேலர்களுக்கு நீ கட்டளை கொடு.  ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களை நீ அனுப்பிவிட வேண்டும். முகாம் முழுவதும் தீட்டுப்படாதபடி அவர்களை அங்கிருந்து வெளியே அனுப்ப வேண்டும்.+ ஏனென்றால், நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன்”+ என்றார்.  அதன்படி, இஸ்ரவேலர்கள் அவர்களை முகாமுக்கு வெளியே அனுப்பிவிட்டார்கள். யெகோவா மோசேக்குச் சொன்னபடியே இஸ்ரவேலர்கள் செய்தார்கள்.  பின்பு யெகோவா மோசேயிடம்,  “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘ஒரு ஆணோ பெண்ணோ ஏதோவொரு பாவத்தைச் செய்து யெகோவாவுக்குத் துரோகம் பண்ணினால் அவர் குற்றவாளியாக இருப்பார்.+  அந்தப் பாவத்தை அவர் ஒத்துக்கொள்ள வேண்டும்.+ குற்றத்துக்கு அபராதமாக முழு நஷ்ட ஈட்டையும், அதன் மதிப்பில் ஐந்திலொரு பாகத்தையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.+ யாருக்கு எதிராகக் குற்றம் செய்தாரோ அந்த நபருக்கு அதைத் தர வேண்டும்.  ஆனால் அந்த நபர் இறந்துவிட்டால், அந்த நஷ்ட ஈட்டை வாங்கிக்கொள்ள அவருக்கு நெருங்கிய சொந்தக்காரரும் இல்லாவிட்டால், அதை யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டும். அது குருவானவருக்குச் சொந்தமாகும். அதோடு, குற்றம் செய்தவருடைய பாவத்துக்குப் பரிகாரமாகக் குருவானவர் செலுத்தும் செம்மறியாட்டுக் கடாவும் அவருக்கே சொந்தமாகும்.+  இஸ்ரவேலர்கள் குருவானவருக்குக் கொடுக்கிற எல்லா பரிசுத்த காணிக்கைகளும்+ அவருக்கே சொந்தமாகும்.+ 10  ஒவ்வொருவரும் கொடுக்கிற பரிசுத்த பொருள்கள் குருவானவருக்குப் போய்ச் சேரும். ஒருவர் குருவானவருக்கு எதைக் கொடுத்தாலும் அது குருவானவருக்கே சொந்தமாகும்’” என்றார். 11  பின்பு யெகோவா மோசேயிடம், 12  “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘ஒருவனுடைய மனைவி நடத்தைகெட்டுப்போய் அவனுக்குத் துரோகம் செய்திருக்கலாம். 13  அவள் வேறொருவனோடு உறவுகொண்டது+ அவளுடைய கணவனுக்குத் தெரியாமல் இருக்கலாம், மற்றவர்களுக்கும் தெரியாமல் இருக்கலாம். அவள் களங்கப்பட்டிருந்தும் அவளுக்கு எதிராகச் சாட்சிகள் இல்லாமலோ அவள் கையும் களவுமாகப் பிடிபடாமலோ இருக்கலாம். 14  அவள் அப்படிக் களங்கப்பட்டிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவளுடைய நடத்தையைக் கணவன் சந்தேகப்பட்டால், 15  குருவானவரிடம் அவளைக் கூட்டிக்கொண்டு வர வேண்டும். அதோடு, அவளுக்காக ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* பார்லி மாவைக் காணிக்கையாய்க் கொண்டுவர வேண்டும். அவன் அந்த மாவில் எண்ணெய் ஊற்றவோ சாம்பிராணியை வைக்கவோ கூடாது. ஏனென்றால், அது சந்தேகத்தின் காரணமாகச் செலுத்தப்படுகிற உணவுக் காணிக்கை, குற்றத்தைக் கவனத்துக்குக் கொண்டுவரும் உணவுக் காணிக்கை. 16  குருவானவர் அவளைக் கூப்பிட்டு யெகோவாவின் முன்னிலையில் நிறுத்துவார்.+ 17  பின்பு ஒரு மண்பாத்திரத்தில் சுத்தமான* தண்ணீரை எடுத்து, வழிபாட்டுக் கூடாரத்தின் தரையிலுள்ள மண்ணில் கொஞ்சத்தை அதில் போடுவார். 18  அதன்பின் அவளை யெகோவாவின் முன்னிலையில் நிறுத்தி, அவளுடைய தலைமுடியை அவிழ்ப்பார். அதோடு, சந்தேகத்தின் காரணமாகச் செலுத்தப்படும் உணவுக் காணிக்கையை+ ஒரு நினைப்பூட்டுதலாக அவள் கையில் வைப்பார். சாபத்தைக் கொண்டுவரும் அந்தக் கசப்பான தண்ணீரைக்+ குருவானவர் தன் கையில் வைத்திருப்பார். 19  பின்பு, குருவானவர் அவளைச் சத்தியம் செய்ய வைத்து, இப்படிச் சொல்ல வேண்டும்: “உன் கணவனுக்குச் சொந்தமாக இருக்கும் நீ+ வேறு எந்த ஆணோடும் உறவுகொள்ளாமல் கற்புள்ளவளாக இருந்தால், இந்தக் கசப்பான தண்ணீர் உனக்கு எந்தச் சாபத்தையும் கொண்டுவராது. 20  நீ உன் கணவனுக்குச் சொந்தமானவளாக இருந்தும் நடத்தைகெட்டுப்போய் வேறொருவனோடு உறவுகொண்டிருந்தால்+—” 21  ‘தப்பு செய்திருந்தால் சாபம் வரட்டும்’ என்று உறுதிமொழி எடுக்கும்படி அவளிடம் குருவானவர் சொல்வார். பின்பு குருவானவர் அவளிடம், “ஜனங்கள் உன்னுடைய கெட்ட உதாரணத்தைச் சொல்லி சபிக்கும்படியும் ஆணையிடும்படியும் யெகோவா செய்யட்டும். யெகோவா உன் தொடையை* அழுகச் செய்து,* உன் வயிற்றை வீங்கச் செய்யட்டும். 22  சாபத்தைக் கொண்டுவரும் தண்ணீர் உன் குடலுக்குள் போய் உன் வயிற்றை வீங்க வைத்து, உன் தொடையை அழுகச் செய்யட்டும்” என்று சொல்வார். அதற்கு அந்தப் பெண், “ஆமென்! ஆமென்!”* என்று சொல்ல வேண்டும். 23  பின்பு, குருவானவர் இந்தச் சாபங்களை ஒரு புத்தகத்தில் எழுதி அந்தக் கசப்பான தண்ணீரில் அவற்றைக் கழுவ வேண்டும். 24  அதன்பின், சாபத்தைக் கொண்டுவரும் கசப்பான தண்ணீரை அவளுக்குக் குடிக்கக் கொடுக்க வேண்டும். அந்தத் தண்ணீர் அவளுடைய உடலுக்குள் போய்க் கசப்பான விளைவை உண்டாக்கும். 25  சந்தேகத்தின் காரணமாகச் செலுத்தப்படுகிற உணவுக் காணிக்கையை+ அவளுடைய கையிலிருந்து குருவானவர் வாங்கி யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்ட வேண்டும். பின்பு, பலிபீடத்தின் பக்கத்தில் கொண்டுவர வேண்டும். 26  குருவானவர் அந்த உணவுக் காணிக்கையிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்து, மொத்த காணிக்கைக்கும் அடையாளமாக அதைப் பலிபீடத்தில் எரிப்பார்.+ பின்பு, அந்தத் தண்ணீரைக் குடிக்கும்படி அவளிடம் சொல்வார். 27  அவள் தன்னைக் களங்கப்படுத்தி தன் கணவனுக்குத் துரோகம் செய்திருந்தால், சாபத்தைக் கொண்டுவரும் அந்தத் தண்ணீரை அவள் குடித்தவுடன் அது அவளுக்குள் போய்க் கசப்பான விளைவை உண்டாக்கும். அவள் வயிறு வீங்கும், தொடை அழுகும், ஜனங்கள் மத்தியில் அவள் சாபக்கேடாக இருப்பாள். 28  ஆனால், அவள் தன்னைக் களங்கப்படுத்தாமல் தூய்மையாக இருந்தால், அப்படிப்பட்ட எந்தக் கேடும் அவளுக்கு வராது. அவள் கர்ப்பமாகி குழந்தை பெறுவாள். 29  ஒரு பெண் தன் கணவனுக்குச் சொந்தமானவளாக இருக்கும்போது வழிதவறிப் போய்த் தன்னைக் களங்கப்படுத்தினால், 30  அல்லது ஒருவன் தன்னுடைய மனைவியின் நடத்தையைச் சந்தேகப்பட்டால் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் இவைதான்.+ அவன் தன்னுடைய மனைவியை யெகோவாவின் முன்னிலையில் நிறுத்த வேண்டும், குருவானவர் இந்தச் சட்டங்களின்படி அவளுக்குச் செய்ய வேண்டும். 31  அப்போது, அந்த மனிதன் குற்றமில்லாதவனாக இருப்பான், ஆனால் அவனுடைய மனைவி அந்தக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்படுவாள்’” என்றார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “சுமார் ஒரு கிலோ.”
நே.மொ., “பரிசுத்தமான.”
அநேகமாக, பிறப்பு உறுப்பை இது குறிக்கலாம்.
இது ஒருவேளை மலடியாக்குவதைக் குறிக்கலாம்.
அதாவது, “அப்படியே ஆகட்டும்! அப்படியே ஆகட்டும்!”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா