கொரிந்தியருக்கு முதலாம் கடிதம் 4:1-21

4  எங்களைக் கிறிஸ்துவின் வேலையாட்கள்* என்றும், கடவுளுடைய பரிசுத்த ரகசியங்களை+ அறிவிப்பதற்கு நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் என்றும் மக்கள் நினைக்க வேண்டும்.  நிர்வாகிகள் உண்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.  என்னைப் பொறுத்தவரை, நீங்களோ ஒரு நீதிமன்றமோ என்னை நியாயந்தீர்த்தால் அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்; சொல்லப்போனால், என்னை நானே நியாயந்தீர்த்துக்கொள்ளவும் மாட்டேன்.  ஏனென்றால், என்னிடம் எந்தக் குற்றமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை; அதற்காக நான் குற்றமற்றவனாக ஆகிவிட மாட்டேன்; என்னை நியாயந்தீர்ப்பவர் யெகோவாதான்.*+  அதனால், ஏற்ற காலத்துக்கு முன்பே, அதாவது நம் எஜமான் வருவதற்கு முன்பே, எதைக் குறித்தும் நியாயந்தீர்க்காதீர்கள்.+ அவர் இருட்டில் மறைந்திருப்பவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவார், உள்ளத்தில் இருக்கிற நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்போது, கடவுளிடமிருந்து ஒவ்வொருவனும் அவனுக்குரிய பாராட்டைப் பெறுவான்.+  சகோதரர்களே, என்னையும் அப்பொல்லோவையும்+ உதாரணமாகக் காட்டி உங்கள் நன்மைக்காக இவற்றைச் சொல்கிறேன்; “எழுதப்பட்ட விஷயங்களுக்கு மிஞ்சிப் போகாதீர்கள்” என்ற நியதியை நீங்கள் எங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான், நீங்கள் தலைக்கனம் இல்லாதவர்களாகவும்+ பாரபட்சம் காட்டாதவர்களாகவும் இருப்பீர்கள்.  நீங்கள் எந்த விதத்தில் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள்? உங்களிடம் இருக்கிற எல்லாமே கடவுள் கொடுத்ததுதானே?+ எல்லாமே அவரிடமிருந்து கிடைத்திருக்கும்போது, உங்களுடைய சொந்த பலத்தால் பெற்றுக்கொண்டதுபோல் ஏன் பெருமையடிக்கிறீர்கள்?  தேவையானதெல்லாம் ஏற்கெனவே உங்களுக்குக் கிடைத்துவிட்டதோ? ஏற்கெனவே பணக்காரர்களாகிவிட்டீர்களோ? நாங்கள் இல்லாமலேயே ராஜாக்களாக ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டீர்களோ?+ அப்படி நீங்கள் ராஜாக்களாக ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டாலும் நல்லதுதான்; நாங்களும் உங்களோடுகூட ராஜாக்களாக ஆட்சி செய்வோமே.+  கொல்லப்படுவதற்காக அரங்கில் கடைசியாக நிறுத்தப்படுகிற ஆட்களைப் போல் ஆகும்படி அப்போஸ்தலர்களாகிய எங்களைக் கடவுள் செய்துவிட்டார்+ என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், இந்த உலகத்துக்கும் தேவதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் நாங்கள் காட்சிப்பொருளாக ஆகியிருக்கிறோம்.+ 10  கிறிஸ்துவைப் பின்பற்றுவதால் நாங்கள் முட்டாள்களாகக் கருதப்படுகிறோம்;+ நீங்களோ, கிறிஸ்துவைப் பின்பற்றுகிற விவேகிகளாக உங்களை நினைத்துக்கொள்கிறீர்கள். நாங்கள் பலவீனமானவர்களாகக் கருதப்படுகிறோம்; நீங்களோ, உங்களைப் பலசாலிகளாக நினைத்துக்கொள்கிறீர்கள். நாங்கள் மதிப்பில்லாதவர்களாகக் கருதப்படுகிறோம், நீங்களோ, உங்களை மதிப்புக்குரியவர்களாக நினைத்துக்கொள்கிறீர்கள். 11  இந்த நேரம்வரை நாங்கள் பசியோடு இருக்கிறோம்,+ தாகத்தோடு இருக்கிறோம்,+ போதுமான உடையில்லாமல்* இருக்கிறோம்; அடித்து நொறுக்கப்படுகிறோம்,+ வீடுவாசல் இல்லாமல் தவிக்கிறோம். 12  எங்கள் கைகளால் பாடுபட்டு வேலை செய்கிறோம்;+ மற்றவர்கள் எங்களை அவமானப்படுத்தும்போது ஆசீர்வதிக்கிறோம்,+ கொடுமைப்படுத்தும்போது பொறுமையோடு சகித்துக்கொள்கிறோம்.+ 13  இல்லாததையும் பொல்லாததையும் சொல்லும்போது சாந்தமாகப் பதில் சொல்கிறோம்;+ இன்றுவரை நாங்கள் இந்த உலகத்தின் குப்பையாகவும் எல்லாவற்றின் கழிவுப்பொருளாகவும் கருதப்படுகிறோம். 14  உங்களை வெட்கப்படுத்துவதற்காக நான் இவற்றை எழுதவில்லை, என் அன்புக் கண்மணிகளாக நினைத்து உங்களுக்குப் புத்திசொல்வதற்காகவே இதையெல்லாம் எழுதுகிறேன். 15  கிறிஸ்துவின் சீஷர்களில் 10,000 ஆசான்கள்* உங்களுக்கு இருக்கலாம், ஆனாலும் நிச்சயம் நிறைய தகப்பன்மார் உங்களுக்கு இல்லை. நல்ல செய்தியை அறிவித்ததால் கிறிஸ்து இயேசுவின் மூலம் நான் உங்களுக்குத் தகப்பனாக ஆகியிருக்கிறேன்.+ 16  அதனால், என்னைப் போல் நடந்துகொள்ளும்படி+ உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். 17  அதனால்தான், நம் எஜமானுடைய சேவையை உண்மையோடு செய்கிற என் அன்புப் பிள்ளை தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புகிறேன். கிறிஸ்து இயேசுவின் சேவையில் நான் பயன்படுத்தும் முறைகளை அவர் உங்களுக்கு ஞாபகப்படுத்துவார்.+ நான் எல்லா இடங்களிலும் எல்லா சபைகளிலும் அந்த முறைகளையே கற்றுக்கொடுத்து வருகிறேன். 18  நான் உங்களிடம் வர மாட்டேன் என்று நினைத்துக்கொண்டு சிலர் தலைக்கனத்தோடு நடக்கிறார்கள். 19  ஆனால், யெகோவாவுக்கு* விருப்பம்* இருந்தால் நான் உங்களிடம் சீக்கிரம் வருவேன். தலைக்கனத்தோடு நடக்கிற இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அல்ல, இவர்களுக்குக் கடவுளுடைய வல்லமை இருக்கிறதா என்பதையே பார்க்கப்போகிறேன். 20  கடவுளுடைய அரசாங்கம் பேச்சின் மூலம் அல்ல, அவருடைய வல்லமையின் மூலம்தான் தெளிவாகத் தெரிகிறது. 21  அதனால், நான் உங்களிடம் எப்படி வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? பிரம்போடு வர வேண்டுமா,+ அன்போடும் சாந்தத்தோடும் வர வேண்டுமா?

அடிக்குறிப்புகள்

வே.வா., “அடிமைகள்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
நே.மொ., “நிர்வாணமாக.”
வே.வா., “பாதுகாப்பாளர்கள்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “சித்தம்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா