யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல் 18:1-24
18 இவற்றுக்குப் பின்பு, இன்னொரு தேவதூதர் மிகுந்த அதிகாரத்தோடு பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். அவருடைய மகிமையால் பூமி பிரகாசமானது.
2 அவர் சத்தமாக, “அவள் விழுந்துவிட்டாள்! மகா பாபிலோன் விழுந்துவிட்டாள்!+ அவள் பேய்களின் குடியிருப்பாகவும், பேய்களும்* அசுத்தமான, அருவருப்பான எல்லாவித பறவைகளும் தங்குகிற இடமாகவும் ஆகிவிட்டாள்!+
3 பாலியல் முறைகேட்டில்* ஈடுபடத் தூண்டுகிற அவளுடைய திராட்சமதுவுக்கு எல்லா தேசத்தாரும் பலியாகியிருக்கிறார்கள்;+ பூமியின் ராஜாக்கள் அவளோடு பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டார்கள்,+ பூமியில் இருக்கிற வியாபாரிகள்* அவளுடைய மிதமிஞ்சிய ஆடம்பரத்தால் பணக்காரர்களானார்கள்” என்று சொன்னார்.
4 பின்பு, பரலோகத்திலிருந்து வந்த இன்னொரு குரலைக் கேட்டேன்; அது, “என் மக்களே, அவளுடைய பாவங்களுக்குத் துணைபோகாமலும் அவளுக்கு வரப்போகும் தண்டனைகளில் பங்குகொள்ளாமலும் இருக்க வேண்டுமென்றால்+ அவளைவிட்டு வெளியே வாருங்கள்.+
5 அவள் செய்த பாவங்கள் பரலோகம்வரை எட்டியிருக்கின்றன;+ அவள் செய்த அநியாயங்களை* கடவுள் நினைத்துப் பார்த்திருக்கிறார்.+
6 அவள் மற்றவர்களுக்குச் செய்தது போலவே நீங்கள் அவளுக்குச் செய்யுங்கள்.+ அவள் செய்ததை இரண்டு மடங்காக அவளுக்குச் செய்யுங்கள்.+ அவள் மற்றவர்களுக்குத் திராட்சமதுவைக் கலந்துகொடுத்த கிண்ணத்தில்+ இரண்டு மடங்காக அவளுக்குக் கலந்துகொடுங்கள்.+
7 எந்தளவுக்கு அவள் தன்னையே பெருமைப்படுத்தி, மிதமிஞ்சிய ஆடம்பரத்தோடு வாழ்ந்தாளோ அந்தளவுக்கு அவளைச் சித்திரவதை செய்யுங்கள், துக்கத்தில் தள்ளுங்கள். ஏனென்றால், ‘நான் ஒரு ராணியாக உட்கார்ந்திருக்கிறேன், நான் விதவை அல்ல, நான் ஒருபோதும் துக்கப்பட மாட்டேன்’+ என்று அவள் தன்னுடைய இதயத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
8 அதனால்தான் சாவு, துக்கம், பஞ்சம் ஆகிய தண்டனைகள் ஒரே நாளில் அவளுக்கு வரும். அவள் நெருப்பில் முழுவதுமாகச் சுட்டெரிக்கப்படுவாள்.+ அவளை நியாயந்தீர்த்த கடவுளாகிய யெகோவா* பலமுள்ளவராக இருக்கிறார்.+
9 அவளுடன் பாலியல் முறைகேட்டில்* ஈடுபட்டு மிதமிஞ்சிய ஆடம்பரத்தோடு வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் எரியும்போது உண்டாகிற புகையைப் பார்த்து துக்கப்பட்டு நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுவார்கள்.
10 அவள் அப்படிச் சித்திரவதை செய்யப்படுவதைப் பார்த்துப் பயந்து, தூரத்தில் நின்றுகொண்டு, ‘ஐயோ! மகா நகரமே! ஐயோ! பலமுள்ள பாபிலோன் நகரமே!+ ஒரு மணிநேரத்தில் உனக்குத் தண்டனைத் தீர்ப்பு வந்துவிட்டதே!’ என்று சொல்வார்கள்.
11 அதோடு, உலகத்தில் இருக்கிற வியாபாரிகளும் அவளுக்காகத் துக்கப்பட்டு அழுது புலம்புவார்கள். ஏனென்றால், அவர்களுடைய சரக்குகளை வாங்க இனி யாருமே இருக்க மாட்டார்கள்.
12 தங்கம், வெள்ளி, விலைமதிப்புள்ள கற்கள், முத்துக்கள், உயர்தரமான நாரிழை* துணி, ஊதா நிற துணி, பட்டுத் துணி, கருஞ்சிவப்புநிற துணி, வாசனை மரத்தால் செய்யப்பட்ட எல்லா விதமான பொருள்கள், யானைத்தந்தத்தாலும் விலை உயர்ந்த மரத்தாலும் செம்பினாலும் இரும்பினாலும் பளிங்குக்கல்லினாலும் செய்யப்பட்ட எல்லா விதமான பொருள்கள்,
13 லவங்கப்பட்டை, ஏலக்காய்,* தூபப்பொருள், வாசனை எண்ணெய், சாம்பிராணி, திராட்சமது, ஒலிவ எண்ணெய், நைசான மாவு, கோதுமை, ஆடுமாடுகள், குதிரைகள், வண்டிகள் ஆகியவற்றையும், அடிமைகள், மக்கள் ஆகியோரையும் வாங்க இனி யாருமே இருக்க மாட்டார்கள்.
14 நீ ஆசைப்பட்ட நல்ல பொருள்கள்* உன்னைவிட்டுப் போய்விட்டன. உன்னிடம் இருக்கிற ருசியான உணவு வகைகளும் அழகான பொருள்களும் ஒரேயடியாக ஒழிந்துபோய்விட்டன.
15 இந்தச் சரக்குகளை விற்று அவளால் பணக்காரர்களான வியாபாரிகள் அவள் சித்திரவதை செய்யப்படுவதைப் பார்த்துப் பயந்து, தூரத்தில் நின்றுகொண்டு,
16 ‘ஐயோ! ஐயோ! உயர்தரமான நாரிழை உடையும் ஊதா நிற உடையும் கருஞ்சிவப்புநிற உடையும் போட்டுக்கொண்டு, தங்க நகைகளாலும் ரத்தினங்களாலும் முத்துக்களாலும் அலங்கரித்திருந்த மகா நகரமே!+
17 ஒரு மணிநேரத்தில் இவ்வளவு செல்வமும் அழிந்துபோனதே!’ என்று துக்கத்தில் புலம்பி அழுவார்கள்.
கப்பல் தலைவர்கள் எல்லாரும், கப்பல் பயணம் செய்கிற எல்லாரும், கப்பலோட்டிகளும், கடலில் தொழில் செய்கிற எல்லாரும்,
18 அவள் எரியும்போது வருகிற புகையைப் பார்த்து, தூரத்தில் நின்று, ‘இந்த மகா நகரத்தைப் போல வேறு எந்த நகரமாவது இருக்கிறதா?’ என்று சத்தமாகக் கத்துவார்கள்.
19 அதோடு, தங்கள் தலையில் மண்ணைப் போட்டுக்கொண்டு, ‘ஐயோ! ஐயோ! கப்பல் முதலாளிகள் எல்லாரையும் தன்னுடைய செல்வச்செழிப்பால் பணக்காரர்களாக்கிய மகா நகரமாகிய அவள் ஒரு மணிநேரத்தில் அழிந்துபோனாளே!’+ என்று சத்தமாகப் புலம்பி அழுவார்கள்.
20 பரலோகமே!+ பரிசுத்தவான்களே!+ அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளுக்கு வந்த அழிவை நினைத்து சந்தோஷப்படுங்கள். ஏனென்றால், உங்களுக்காகக் கடவுள் அவளுக்குத் தண்டனைத் தீர்ப்பு கொடுத்துவிட்டார்!”+
21 அப்போது, பலமுள்ள ஒரு தேவதூதர் பெரிய திரிகைக் கல்லைப் போன்ற ஒரு கல்லை எடுத்துக் கடலில் எறிந்து, “இப்படித்தான் பாபிலோன் மகா நகரமும் வேகமாக வீசப்பட்டு, இனி ஒருபோதும் இல்லாமல்போகும்.+
22 பாபிலோனே, யாழ் இசைத்துப் பாடுகிறவர்கள், குழல் ஊதுகிறவர்கள், எக்காளம் முழங்குகிறவர்கள் போன்ற இசைக்கலைஞர்களின் சத்தம் இனி ஒருபோதும் உன் நடுவில் கேட்காது; கைத்தொழில் செய்கிற எந்தத் தொழிலாளியும் இனி உன் நடுவில் இருக்க மாட்டார்; திரிகைக் கல்லின் சத்தம் இனி ஒருபோதும் உன் நடுவில் கேட்காது.
23 விளக்குகளின் ஒளி இனி ஒருபோதும் உன் நடுவில் பிரகாசிக்காது; மணமகனின் சத்தமும் மணமகளின் சத்தமும் இனி ஒருபோதும் உன் நடுவில் கேட்காது; உன் வியாபாரிகள் பூமியில் மிகுந்த செல்வாக்குள்ளவர்களாக இருந்தார்கள், உன்னுடைய ஆவியுலகத் தொடர்பு+ பழக்கங்களால் எல்லா தேசத்தாரும் ஏமாற்றப்பட்டார்கள்.
24 தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும்+ பூமியில் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்ட எல்லாருடைய இரத்தமும்+ அவளிடம் காணப்பட்டது” என்று சொன்னார்.
அடிக்குறிப்புகள்
^ அல்லது, “சுவாசமும்; விஷக் காற்றும்.”
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ வே.வா., “பயண வியாபாரிகள்.”
^ வே.வா., “குற்றங்களை.”
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ அதாவது, “லினன்.”
^ வே.வா., “இந்தியாவில் கிடைக்கும் நறுமணப் பொருள்.”
^ நே.மொ., “அருமையான பழம்.”