லூக்கா எழுதியது 5:1-39

5  ஒருசமயம் கெனேசரேத்து ஏரி*+ பக்கத்தில் நின்று கடவுளுடைய வார்த்தையை அவர் கற்பித்துக்கொண்டிருந்தார்; அதைக் கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்தார் அவரை நெருக்கித்தள்ள ஆரம்பித்தார்கள்.  அப்போது, ஏரிக்கரையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு படகுகளை அவர் பார்த்தார். மீனவர்கள் அவற்றைவிட்டு இறங்கி தங்களுடைய வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.+  அந்தப் படகுகள் ஒன்றில் அவர் ஏறினார், அது சீமோனுடைய படகு; அதைக் கரையிலிருந்து சற்றுத் தள்ளும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். பின்பு, அந்தப் படகில் உட்கார்ந்துகொண்டே கூட்டத்தாருக்குக் கற்பிக்க ஆரம்பித்தார்.  அவர் பேசி முடித்தபோது சீமோனிடம், “ஆழமான இடத்துக்குப் படகைக் கொண்டுபோய், உங்கள் வலைகளைப் போட்டு மீன்பிடியுங்கள்” என்று சொன்னார்.  ஆனால் சீமோன் அவரைப் பார்த்து, “போதகரே, ராத்திரி முழுவதும் நாங்கள் பாடுபட்டும் ஒன்றுமே கிடைக்கவில்லை;+ இருந்தாலும், நீங்கள் சொல்வதால் வலைகளைப் போடுகிறேன்” என்று சொன்னார்.  அதன்படியே, அவர்கள் வலைகளைப் போட்டபோது ஏராளமான மீன்கள் சிக்கின. சொல்லப்போனால், அவர்களுடைய வலைகளே கிழிய ஆரம்பித்தன.+  அதனால், இன்னொரு படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளிடம் சைகை காட்டி உதவிக்கு வரச் சொல்லிக் கூப்பிட்டார்கள். அவர்கள் வந்து இரண்டு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள், அப்போது அவை மூழ்கிவிடும்போல் ஆகிவிட்டன.  இதைப் பார்த்து சீமோன் பேதுரு இயேசுவின் காலில் விழுந்து, “எஜமானே, நான் ஒரு பாவி, என்னைவிட்டுப் போய்விடுங்கள்” என்று சொன்னார்.  அத்தனை மீன்களைப் பிடித்ததைப் பார்த்து அவரும் அவரோடு இருந்தவர்களும் மலைத்துப்போயிருந்தார்கள். 10  சீமோனுடைய கூட்டாளிகளான செபெதேயுவின் மகன்கள் யாக்கோபும் யோவானும்கூட+ மலைத்துப்போயிருந்தார்கள். ஆனால் சீமோனிடம் இயேசு, “பயப்படாதே. இனிமேல் நீ மனுஷர்களை உயிரோடு பிடிப்பாய்”+ என்று சொன்னார். 11  அவர்கள் தங்களுடைய படகுகளைக் கரைசேர்த்த பின்பு, எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றிப் போனார்கள்.+ 12  இன்னொரு சமயம் அவர் ஒரு நகரத்தில் இருந்தபோது, உடல் முழுவதும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் வந்தான். அவன் இயேசுவைப் பார்த்ததும் அவர் முன்னால் விழுந்து, “ஐயா, உங்களுக்கு விருப்பம் இருந்தால், என்னைச் சுத்தமாக்க முடியும்” என்று சொல்லிக் கெஞ்சினான்.+ 13  அப்போது, அவர் தன்னுடைய கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் இருக்கிறது, நீ சுத்தமாகு” என்று சொன்னார். உடனே தொழுநோய் அவனைவிட்டு மறைந்தது.+ 14  இதைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று அவனுக்குக் கட்டளை கொடுத்தார். “ஆனால், குருமாரிடம் போய் உன்னைக் காட்டு; நீ சுத்தமானதற்காக, மோசே கட்டளையிட்ட காணிக்கையைக் கொடு;+ நீ குணமானதற்கு அத்தாட்சியாக அது அவர்களுக்கு இருக்கும்”+ என்று சொல்லி அனுப்பினார். 15  அப்படியிருந்தும், அவரைப் பற்றிய செய்தி அதிகமாகத்தான் பரவியது. அவர் பேசுவதைக் கேட்பதற்கும், நோய்களிலிருந்து குணமாவதற்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரிடம் வந்தார்கள்.+ 16  ஆனால், அவர் ஜெபம் செய்வதற்காக அடிக்கடி தனிமையான இடங்களுக்குப் போனார். 17  ஒருநாள் அவர் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்தபோது, கலிலேயாவிலும் யூதேயாவிலும் இருக்கிற எல்லா கிராமங்களிலிருந்தும் எருசலேம் நகரத்திலிருந்தும் வந்த பரிசேயர்களும் திருச்சட்டப் போதகர்களும் உட்கார்ந்திருந்தார்கள்; மக்களைக் குணமாக்குவதற்கு யெகோவாவின்* வல்லமை அவரிடம் இருந்தது.+ 18  அப்போது, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சில ஆட்கள் படுக்கையோடு தூக்கிக்கொண்டு வந்தார்கள்; அவனை உள்ளே கொண்டுபோய் இயேசுவின் முன்னால் வைப்பதற்காக அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள்.+ 19  கூட்டம் அதிகமாக இருந்ததால் அவனை உள்ளே கொண்டுபோக வழி கிடைக்கவில்லை; அதனால் வீட்டுக்கூரையின் மேல் ஏறி, ஓடுகள் வழியாக அவனைப் படுக்கையோடு சேர்த்து இயேசுவுக்கு முன்பாகக் கூட்டத்தின் நடுவில் இறக்கினார்கள். 20  அவர்களுடைய விசுவாசத்தை அவர் பார்த்தபோது, “மனுஷனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன”+ என்று சொன்னார். 21  இதைக் கேட்ட வேத அறிஞர்களும் பரிசேயர்களும், “தெய்வ நிந்தனை செய்கிற இவன் யார்? கடவுள் ஒருவரைத் தவிர வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?”+ என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். 22  ஆனால் இயேசு அவர்களுடைய யோசனையைப் புரிந்துகொண்டு, “உங்கள் இதயத்தில் என்ன யோசிக்கிறீர்கள்? 23  ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன’ என்று சொல்வது சுலபமா, அல்லது ‘எழுந்து நட’ என்று சொல்வது சுலபமா? 24  ஆனாலும், பூமியில் பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் மனிதகுமாரனுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வதற்காக—” என்று சொல்லிவிட்டு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனிடம், “நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போ”+ என்று சொன்னார். 25  அவன் உடனே அவர்கள் முன்பாக எழுந்து, தான் படுத்திருந்த படுக்கையை எடுத்துக்கொண்டு, கடவுளை மகிமைப்படுத்திக்கொண்டே தன் வீட்டுக்குப் போனான். 26  அதைப் பார்த்த எல்லாரும் பிரமித்துப்போய், கடவுளை மகிமைப்படுத்தினார்கள்; அதேசமயத்தில் மிகுந்த பயபக்தியோடு, “இன்றைக்கு எப்பேர்ப்பட்ட அதிசயங்களைப் பார்த்தோம்!” என்று பேசிக்கொண்டார்கள். 27  இதற்குப் பின்பு அவர் வெளியே போய், வரி வசூலிக்கும் அலுவலகத்தில் லேவி என்பவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்; வரி வசூலிப்பவரான அவரிடம், “என்னைப் பின்பற்றி வா”+ என்று சொன்னார். 28  அவர் எழுந்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றிப் போனார். 29  அதோடு, அவர் தன்னுடைய வீட்டில் இயேசுவுக்காக ஒரு பெரிய விருந்து வைத்தார்; வரி வசூலிப்பவர்கள் பலரும் மற்றவர்களும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.+ 30  அப்போது, பரிசேயர்களும் அவர்களுடைய வேத அறிஞர்களும் அவருடைய சீஷர்களிடம் முணுமுணுத்து, “நீங்கள் ஏன் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிட்டுக் குடிக்கிறீர்கள்”+ என்று கேட்டார்கள். 31  அதற்கு இயேசு, “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை.+ 32  நீதிமான்களை அல்ல, பாவிகளைத்தான் மனம் திருந்தும்படி அழைக்க வந்திருக்கிறேன்”+ என்று அவர்களிடம் சொன்னார். 33  அப்போது அவர்கள், “யோவானுடைய சீஷர்கள் அடிக்கடி விரதமிருந்து, மன்றாடி ஜெபம் செய்கிறார்கள்; பரிசேயர்களுடைய சீஷர்களும் அப்படியே செய்கிறார்கள்; ஆனால், உன்னுடைய சீஷர்கள் சாப்பிடுவதும் குடிப்பதுமாக இருக்கிறார்களே”+ என்று அவரிடம் சொன்னார்கள். 34  அதற்கு இயேசு, “மணமகன் தங்களோடு இருக்கும்போது அவருடைய நண்பர்களை விரதமிருக்கச் செய்ய உங்களால் முடியாது, இல்லையா? 35  ஆனால், மணமகன்+ உண்மையிலேயே அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் வரும், அப்போது அவர்கள் விரதம் இருப்பார்கள்”+ என்று சொன்னார். 36  அதோடு, அவர்களுக்கு ஓர் உவமையையும் சொன்னார்; “யாருமே புதிய உடையிலிருந்து ஒரு துண்டுத் துணியைக் கிழித்து பழைய உடையில் ஒட்டுப்போட மாட்டார்கள். அப்படிச் செய்தால், அந்தப் புதிய ஒட்டுத்துணி கிழிந்துவிடும், பழைய உடைக்கு அது பொருத்தமாகவும் இருக்காது.+ 37  அதேபோல், பழைய தோல் பைகளில் யாருமே புதிய திராட்சமதுவை ஊற்றி வைக்க மாட்டார்கள்; அப்படிச் செய்தால், புதிய திராட்சமது அந்தப் பைகளை வெடிக்க வைத்துவிடும்; அப்போது திராட்சமதுவும் கொட்டிவிடும், பைகளும் நாசமாகிவிடும். 38  அதனால்தான், புதிய திராட்சமதுவைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்க வேண்டும். 39  பழைய திராட்சமதுவைக் குடித்த எவனும் புதிய திராட்சமதுவை விரும்ப மாட்டான்; ‘பழையதுதான் நன்றாக இருக்கிறது’ என்று சொல்வான்” என்றார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “கலிலேயா கடல்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

கலிலேயாவைச் சேர்ந்த மீன்பிடிப் படகின் எஞ்சிய பகுதிகள்
கலிலேயாவைச் சேர்ந்த மீன்பிடிப் படகின் எஞ்சிய பகுதிகள்

1985/1986-ல் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக கலிலேயா கடலின் நீர்மட்டம் குறைந்தது. அப்போது, சேற்றில் புதைந்திருந்த ஒரு பழங்காலப் படகின் முக்கியப் பகுதி வெளியில் தெரிந்தது. எஞ்சியிருக்கும் அந்தப் பகுதியின் நீளம் 8.2 மீ. (27 அடி), அகலம் 2.3 மீ. (7.5 அடி), அதிகபட்ச உயரம் 1.3 மீ. (4.3 அடி). கி.மு. முதல் நூற்றாண்டுக்கும் கி.பி. முதல் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட சமயத்தில் அந்தப் படகு கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அந்தப் படகு இப்போது இஸ்ரேலில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது கிட்டத்தட்ட 2,000 வருஷங்களுக்கு முன்பு தண்ணீரில் மிதந்து சென்றபோது எப்படி இருந்திருக்கும் என்பதை இந்த வீடியோ அனிமேஷன் காட்டுகிறது.

கலிலேயா கடலில் வாழும் மீன்கள்
கலிலேயா கடலில் வாழும் மீன்கள்

பைபிளில் உள்ள நிறைய வசனங்கள் கலிலேயா கடலில் மீன் பிடிக்கப்பட்டதைப் பற்றியும், அங்கிருந்த மீன்களைப் பற்றியும், மீனவர்களைப் பற்றியும் சொல்கிறது. கலிலேயா கடலில் சுமார் 18 வகையான மீன்கள் வாழ்கின்றன. அவற்றில் கிட்டத்தட்ட பத்து வகைகளைத்தான் மீனவர்கள் பிடித்தார்கள். அந்தப் பத்து வகையான மீன்களை வியாபார ரீதியில் மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதில் ஒரு பிரிவுதான் பினி. இது “பார்பஸ் கெண்டை” என்றும் அழைக்கப்படுகிறது (படத்தில் காட்டப்பட்டிருப்பது பார்பஸ் லாங்கிசெப்ஸ்) (1). அதன் மூன்று இனங்களுக்கு வாயின் ஓரங்களில் முடிபோன்ற இழைகள் இருக்கின்றன; அதனால் செமிட்டிக் மொழியில் “முடி” என்ற அர்த்தத்தைத் தரும் பினீ என்ற பெயரால் அது அழைக்கப்படுகிறது. அது மெல்லுடலிகளையும் நத்தைகளையும் சின்ன மீன்களையும் சாப்பிட்டு உயிர்வாழ்கிறது. நீளமான தலையைக் கொண்ட “பார்பஸ் கெண்டை” 75 செ.மீ. (30 அங்.) நீளத்துக்கு வளருகிறது. அதன் எடை 7 கிலோவுக்கும் அதிகமாக இருக்கலாம். இரண்டாவது பிரிவின் பெயர் முஷ்ட் அல்லது “ஜிலேபி கெண்டை” (படத்தில் காட்டப்பட்டிருப்பது டிலாப்பியா கலிலியா) (2). அரபிய மொழியில் அதற்கு “சீப்பு” என்று அர்த்தம். அதன் ஐந்து இனங்களுக்கு சீப்புபோன்ற முதுகுத் துடுப்பு இருப்பதால் அதற்கு அந்தப் பெயர். ஒரு வகையான முஷ்ட் சுமார் 45 செ.மீ. (18 அங்.) வளருகிறது. அதன் எடை சுமார் 2 கிலோ இருக்கலாம். மூன்றாவது பிரிவின் பெயர் கின்னரேத் சாளை (படத்தில் காட்டப்பட்டிருப்பது அகான்தோபிராமா டெர்ரே சான்க்டே) (3). இந்த சாளை மீன் பார்ப்பதற்கு ஒரு சின்ன ஹெர்ரிங் மீன்போல் இருக்கிறது. பழங்காலத்திலிருந்தே இந்த மீன் பதப்படுத்தப்பட்டு வருகிறது.

முதல் நூற்றாண்டு மீன்பிடிப் படகு
முதல் நூற்றாண்டு மீன்பிடிப் படகு

இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள படகு, கலிலேயா கடற்கரைக்குப் பக்கத்தில் சேற்றில் புதைந்து காணப்பட்ட முதல் நூற்றாண்டு மீன்பிடிப் படகின் எஞ்சிய பகுதிகளை அடிப்படையாக வைத்து சித்தரிக்கப்பட்டுள்ளது; அதோடு, கடற்கரையோரத்தில் அமைந்திருந்த மிக்தால் என்ற ஊரைச் சேர்ந்த முதல் நூற்றாண்டு வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மொசைக் ஓவியத்தையும் அடிப்படையாக வைத்து சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட படகுக்குப் பாய்மரமும் கப்பற்பாயும் (கப்பற்பாய்களும்) இருந்திருக்கலாம். அதில் மொத்தம் ஐந்து படகோட்டிகள் இருந்திருக்கலாம். அவர்களில் நான்கு பேர் துடுப்புப் போட்டிருக்கலாம்; இன்னொருவர் படகின் பின்புறத்தில் இருந்த சின்ன தளத்தில் நின்றுகொண்டு படகை ஓட்டியிருக்கலாம். அந்தப் படகின் நீளம் சுமார் 8 மீ. (26.5 அடி). அதன் நடுப்பகுதியின் அகலம் சுமார் 2.5 மீ. (8 அடி), அதன் ஆழம் 1.25 மீ. (4 அடி). அந்தப் படகில் 13 அல்லது அதற்கும் அதிகமான ஆண்கள் பயணம் செய்திருக்கலாம்.