லூக்கா எழுதியது 10:1-42
அடிக்குறிப்புகள்
ஆராய்ச்சிக் குறிப்புகள்
மீடியா

இஸ்ரவேலில் இருக்கும் ஓநாய்கள் முக்கியமாக இரவு நேரங்களில்தான் வேட்டையாடுகின்றன. (ஆப 1:8) ஓநாய்களுக்கு முரட்டுத்தனமும் பசிவெறியும் துணிச்சலும் பேராசையும் அதிகம். அவற்றால் ஓரளவு செம்மறியாடுகளைத்தான் சாப்பிட அல்லது இழுத்துச்செல்ல முடியும் என்றாலும், பொதுவாக அதைவிட அதிகமான செம்மறியாடுகளைக் கொன்று குவிக்கின்றன. பைபிள், விலங்குகளையும் அவற்றின் குணங்களையும் பழக்கங்களையும் அடையாள அர்த்தத்தில் குறிப்பிடுகிறது. நல்ல குணங்கள், கெட்ட குணங்கள் ஆகிய இரண்டுக்குமே அடையாளமாக அவற்றைக் குறிப்பிடுகிறது. உதாரணத்துக்கு, மரணப்படுக்கையில் இருந்தபோது யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனத்தில், வேட்டையாடுகிற ஓநாயை (கானஸ் லூபுஸ்) போல பென்யமீன் கோத்திரத்தார் இருப்பார்கள் என்று அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. (ஆதி 49:27) ஆனால், பெரும்பாலான மற்ற வசனங்களில், மூர்க்கம், பேராசை, கொடூரம், தந்திரம் போன்ற கெட்ட குணங்களுக்குத்தான் ஓநாய்கள் அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. போலித் தீர்க்கதரிசிகள் (மத் 7:15), கிறிஸ்தவ ஊழியத்தைக் கொடூரமாக எதிர்க்கிறவர்கள் (மத் 10:16; லூ 10:3), கிறிஸ்தவ சபைக்குள்ளிருந்தே எழும்பும் ஆபத்தான பொய்ப் போதகர்கள் (அப் 20:29, 30) போன்ற ஆட்கள் ஓநாய்களுக்கு ஒப்பிடப்படுகிறார்கள். ஓநாய்கள் எந்தளவு ஆபத்தானவை என்று மேய்ப்பர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. “கூலிக்கு மேய்ப்பவன்,” “ஓநாய் வருவதைப் பார்த்ததுமே ஆடுகளை விட்டுவிட்டு ஓடிவிடுகிறான்” என்று இயேசு சொன்னார். கூலிக்கு மேய்ப்பவனுக்கு ‘ஆடுகள்மேல் அக்கறையில்லை’ என்றும் சொன்னார். ஆனால் இயேசு, ‘ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிற’ ‘நல்ல மேய்ப்பராக’ இருக்கிறார்.—யோவா 10:11-13.

பழங்காலத்தில் எபிரெயர்கள் தடிகளை அல்லது கம்புகளைப் பயன்படுத்துவது சகஜமாக இருந்தது. பல காரணங்களுக்காக அவர்கள் தடிகளைப் பயன்படுத்தினார்கள்; உதாரணமாக, பிடிமானத்துக்கு (யாத் 12:11; சக 8:4; எபி 11:21), தற்காப்புக்கு அல்லது பாதுகாப்புக்கு (2சா 23:21), போரடிப்பதற்கு (ஏசா 28:27) மற்றும் ஒலிவப்பழங்களை உதிர்ப்பதற்கு (உபா 24:20) அவற்றைப் பயன்படுத்தினார்கள். உணவுப் பை பொதுவாகத் தோலால் செய்யப்பட்டிருந்தது. பயணிகளும் மேய்ப்பர்களும் விவசாயிகளும் மற்றவர்களும் அதைத் தங்கள் தோளில் சுமந்துகொண்டு போனார்கள். உணவு, துணிமணி போன்றவற்றை எடுத்துக்கொண்டு போவதற்காக அந்தப் பைகள் பயன்படுத்தப்பட்டன. ஊழியம் செய்வதற்காக இயேசு தன் அப்போஸ்தலர்களை அனுப்பியபோது, பல அறிவுரைகளைக் கொடுத்தார். அப்போது, தடிகளையும் உணவுப் பைகளையும் பற்றிக் குறிப்பிட்டார். யெகோவா அவர்களுக்குத் தேவையானதைத் தருவார் என்பதால், தங்களிடம் இருப்பதை மட்டும் கொண்டு போக வேண்டும் என்றும், எதையும் கூடுதலாக வாங்கிக்கொண்டு போகக் கூடாது என்றும் அவர் சொன்னார்.—இயேசு கொடுத்த அறிவுரைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள லூ 9:3 மற்றும் 10:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

இந்த வீடியோவில் காட்டப்படும் பரந்துவிரிந்த காட்சி, கலிலேயா கடலின் வடகிழக்குக் கரைக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் ஓஃபிர் கோபுரத்திலிருந்து (Ofir Lookout) எடுக்கப்பட்டது. அன்றைய கப்பர்நகூம் (1) அமைந்திருந்ததாகச் சொல்லப்படும் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 3 கி.மீ. (2 மைல்) தூரத்தில்தான் கோராசின் (2) இருந்தது. இரண்டு வருஷங்களுக்கும் மேலாக இயேசு கலிலேயாவில் பெரிய அளவில் ஊழியம் செய்தபோது பெரும்பாலும் கப்பர்நகூமில் தங்கியதாகத் தெரிகிறது. அப்போஸ்தலர்களான பேதுருவும் அந்திரேயாவும் கப்பர்நகூமில் குடியிருந்தார்கள். மத்தேயு வேலை பார்த்த வரி வசூலிக்கும் அலுவலகம் கப்பர்நகூமில் அல்லது அதற்குப் பக்கத்தில் இருந்தது. (மாற் 1:21, 29; 2:1, 13, 14; 3:16; லூ 4:31, 38) பேதுருவும் அந்திரேயாவும் பிலிப்புவும், கப்பர்நகூமுக்குப் பக்கத்தில் இருந்த பெத்சாயிதா (3) நகரத்தைச் சேர்ந்தவர்கள். (யோவா 1:44) இந்த மூன்று நகரங்களிலும் அவற்றுக்குப் பக்கத்திலும் இயேசு நிறைய அற்புதங்களைச் செய்தார்.—இணைப்பு A7-D, வரைபடம் 3B மற்றும் A7-E, வரைபடம் 4 ஆகியவற்றைப் பாருங்கள்.

இந்த வீடியோவில் காட்டப்படும் சாலை (1), எருசலேமையும் எரிகோவையும் இணைத்த பழங்கால சாலையைக் கற்பனை செய்து பார்க்க உதவுகிறது. அந்தச் சாலை 20 கி.மீ. (12 மைல்) நீளத்தில் இருந்தது; அது கீழ்நோக்கி இறங்கியது; ஏனென்றால், எருசலேமிலிருந்து எரிகோ 1 கி.மீ. (.6 மைல்) இறக்கத்தில் இருந்தது. அந்த ஒதுக்குப்புறமான பொட்டல் காட்டில் அடிக்கடி திருட்டு நடந்தது. அதனால், பயணிகளைப் பாதுகாப்பதற்காக ஒரு காவல்படை அங்கே நிறுத்தப்பட்டது. யூதேய வனாந்தரத்திலிருந்து அந்தச் சாலை புறப்பட்ட இடத்தில்தான் ரோமர்களின் எரிகோ நகரம் (2) அமைந்திருந்தது. அங்கிருந்து கிட்டத்தட்ட 2 கி.மீ. (வெறும் 1 மைலுக்குச் சற்று அதிக) தூரத்தில்தான் பழங்கால எரிகோ நகரம் (3) அமைந்திருந்தது.