அட்டைப்படக் கட்டுரை | நான்கு குதிரைவீரர்களின் சவாரி—நம்மை எப்படிப் பாதிக்கிறது
பாய்ந்து வரும் நான்கு குதிரைகள்!
பயங்கரமான சத்தத்தோடு நான்கு குதிரைகள் பாய்ந்து வருகின்றன! இந்தக் குதிரைகள் பைபிளின் பக்கங்களிலிருந்தே குதித்து வருவதுபோல் தத்ரூபமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. முதலில் வருவது வெள்ளைக் குதிரை. புதிதாக முடிசூட்டப்பட்ட ஒரு ராஜா கம்பீரமாக அதில் சவாரி செய்கிறார். இரண்டாவதாக வருவது சிவப்புக் குதிரை. அதில் சவாரி செய்பவன் பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போடுகிறான். மூன்றாவதாக வருவது கறுப்புக் குதிரை. அதில் சவாரி செய்பவன், கையில் ஒரு தராசைத் தூக்கிப்பிடித்திருக்கிறான். மக்களுக்குத் தேவையான அடிப்படை உணவுக்கே தட்டுப்பாடு வரும் என்ற சோகமான செய்தியை அறிவிக்கிறான். கடைசியாக வருவது மங்கிய நிறமுள்ள குதிரை. மரணமே இந்தக் குதிரையின் மீது சவாரி செய்வதுபோல் விவரிக்கப்பட்டிருக்கிறது. உயிர்க் கொல்லி நோய்கள் வரும் என்பதை இந்தக் குதிரை அடையாளப்படுத்துகிறது. இறந்தவர்களை வாரிக்கொண்டு போகும் கல்லறை இந்தக் குதிரையோடு சேர்ந்து சவாரி செய்கிறது.—வெளிப்படுத்துதல் 6:1-8.
“முதல் தடவ இந்த நாலு குதிரைவீரர்கள பத்தி படிச்சப்போ எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. நியாயத்தீர்ப்பு நாள் சீக்கிரம் வரப்போகுதுனு தோணுச்சு. ஆனா அதுக்கு நான் தயாராவே இல்ல. அதனால நியாயத்தீர்ப்பு நாள்ல நான் அழிஞ்சிடுவேன்னு நினைச்சு பயந்தேன்.”—கிறிஸ்டல்.
“இந்த நாலு வித்தியாசமான குதிரைகளயும் அதுல சவாரி செய்ற வீரர்களயும் பத்தி படிக்கும்போது ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு. அந்த தரிசனத்தோட அர்த்தத்த தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறம் ஒவ்வொரு குதிரையும் எத குறிக்குதுனு புரிஞ்சுக்கிட்டேன்.”—எட்.
வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் அந்த நான்கு குதிரைவீரர்களைப் பற்றி கிறிஸ்டல் யோசித்ததுபோல் நீங்களும் யோசிக்கிறீர்களா? அல்லது எட் உணர்ந்ததுபோல் உணர்கிறீர்களா? பைபிளின் கடைசி புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சியை நிறைய பேர் கேள்விப்பட்டிருக்கிறார்கள். இந்தக் காட்சியைப் பற்றி தெரிந்துகொள்வதன் மூலம் நீங்கள் நன்மையடையலாம். எப்படி? இந்தக் காட்சியை விவரிக்கும் வெளிப்படுத்துதல் புத்தகத்தைப் படித்து அதன்படி வாழும்போது உங்களுக்கு உண்மையான சந்தோஷம் கிடைக்கும் என்று கடவுளே வாக்குக் கொடுத்திருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 1:1-3.
இந்த நான்கு குதிரைவீரர்களைப் பற்றிய தரிசனத்தைப் படித்து சிலர் பயந்துபோயிருக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே நன்மைப் பயமுறுத்துவதற்காக இது எழுதப்படவில்லை. லட்சக்கணக்கான மக்களின் விசுவாசத்தை இது பலப்படுத்தியிருக்கிறது. அருமையான எதிர்காலத்துக்காக ஆவலோடு காத்திருக்க உதவி செய்திருக்கிறது. உங்களுக்கும் நிச்சயம் உதவி செய்யும். தொடர்ந்து வாசியுங்கள்...