யாருடைய கைவண்ணம்?

விதவிதமாக உருவெடுக்கும் செல்களின் ஜாலம்

விதவிதமாக உருவெடுக்கும் செல்களின் ஜாலம்

 தாயின் வயிற்றில் உருவானபோது நீங்கள் கண்ணுக்குத் தெரியாத வெறும் ஒரு குட்டி செல்தான். சைகோட் (zygote) என்ற அந்தக் குட்டி செல்தான், 200-க்கும் அதிகமான, வித்தியாசமான வகை செல்களாக, வெவ்வேறு வடிவத்தில், வெவ்வேறு அளவில் உருவெடுத்தது. அந்த செல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வேலையைச் செய்தது. சில மாதங்களிலேயே, சைகோட் என்ற ஒற்றைச் செல்லாக இருந்த நீங்கள் ஒரு முழு குழந்தையாக உருவானீர்கள்.

 யோசித்துப் பாருங்கள்: ஒரு சைகோட் செல், தன்னுடைய டி.என்.ஏ.-வை (DNA) நகலெடுத்துக்கொண்டு இரண்டாகப் பிரிகிறது. அந்த இரண்டும் அதேபோல் நகலெடுத்துப் பிரிகிறது. இப்படியே செல்கள் எக்கச்சக்கமாகப் பெருகும். ஆரம்பத்தில், புதிதாக உருவாகும் எல்லா செல்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும். ஆனால், அவை ஒவ்வொன்றும் என்ன வகையான செல்லாக ஆக வேண்டும் என்ற எல்லா தகவலும் அவற்றின் டி.என்.ஏ.-க்களில் இருக்கும்.

 ஒரு பெண் கருத்தரித்த ஒரு வாரத்துக்குப் பிறகு, அந்த செல்கள் இரண்டு விதமாக உருவெடுக்க ஆரம்பிக்கும். சில செல்கள் கருவாக (embryo) உருவெடுக்கும். மற்ற செல்கள், கரு வளர்வதற்கு உதவி செய்யும் நஞ்சுக்கொடியாகவும் (placenta) அதனோடு சம்பந்தப்பட்ட மற்ற திசுக்களாகவும் உருவெடுக்கும்.

 மூன்றாவது வாரத்துக்குள், கருவாக உருவெடுத்த செல்கள், மூன்று அடுக்குகளாக தங்களை ஒழுங்கமைத்துக்கொள்ளும். வெளி அடுக்கில் இருக்கும் செல்கள், நரம்பு, மூளை, வாய் மற்றும் வெளிப்புற தோலாகவும், இன்னும் வேறுசில செல்களாகவும் மாறும். நடு அடுக்கில் இருக்கும் செல்கள், இரத்தம், எலும்புகள், சிறுநீரகங்கள், தசைகள் மற்றும் வேறுசில திசுக்களாக மாறும். உள் அடுக்கில் இருக்கும் செல்கள், நுரையீரல், சிறுநீர்ப்பை மற்றும் பெரும்பாலான செரிமான உறுப்புகளாக மாறும்.

கரு வளரும்போது, செல்கள் பல மடங்காகப் பெருகுகின்றன. அவை 200-க்கும் அதிகமான, வித்தியாசமான வகை செல்களாக உருவெடுக்கின்றன

 பிரசவ காலம் முழுவதும், சில செல்கள் தனியாகவோ தொகுதியாகவோ கருவுக்குள்ளேயே இடம்பெயர்ந்துகொண்டிருக்கும். வேறுசில செல்கள், தொகுதி தொகுதியாகச் சேர்ந்துகொள்ளும். அவை தட்டையாக காகிதத் தாள்கள் போல ஆகும். அல்லது, சுருண்டுகொண்டு கயிறுகள் போல ஆகும். அல்லது, பள்ளம் பள்ளமான வடிவமாக ஆகும். செல்கள் கனக்கச்சிதமாக ஒருங்கிணைந்து செயல்படுவதால்தான் இதெல்லாம் சாத்தியம் ஆகிறது! உதாரணத்துக்கு, தாள்கள் போல உருவெடுத்த செல்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கட்டத்தில், அவை சின்னச் சின்னக் குழாய்களாக சுருண்டுகொள்கின்றன. கரு முழுவதும், நிறைய பகுதிகளில் ஒரே சமயத்தில் இது நடக்கிறது. பிறகு, இந்தக் குழாய்கள் நீளமாக வளர்ந்து, கிளைகளாகப் பிரிகிறது. கடைசியில், இவை எல்லாமே இணைந்து உடலின் இரத்த ஓட்ட மண்டலமாக உருவாகிறது.

 ஆரோக்கியமான ஒரு குழந்தை பிறப்பதற்குள், பல கோடி செல்கள் வெவ்வேறு உறுப்புகளாக சரியான விதத்தில், சரியான இடத்தில், சரியான நேரத்தில் உருவாகிவிடுகின்றன.

 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? விதவிதமாக உருவெடுக்கும் இந்தத் திறமை, செல்களுக்குத் தானாகவே வந்திருக்குமா? அல்லது இது யாரோ ஒருவருடைய கைவண்ணமா?